ஜெ. உடல் நலக் குறைவு... மனமுடைந்து தீக்குளித்தவர் மரணம்... விருதாச்சலத்தில் சோகம்
கடலூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குன்றியதால் மனம் உடைந்து தீக்குளித்த அதிமுக கிளைச் செயலாளர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் இல்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று பல்வேறு பிரார்த்தனைகள் அதிமுக தொண்டர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மனம் உடைந்த விருத்தாசலம் புதுகூரப்பேட்டையை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் கி.கணேசன் கடந்த புதன் கிழமையன்று பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கணேசன் இன்று உயிரிழந்தார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த கணேசனை, கடந்த வியாழக்கிழமை ஆ.அருண்மொழிதேவன் எம்பி சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்தார். மேலும் மருத்தவ செலவுக்காக ரூ. 25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.