பிள்ளைகளைத் திட்டாதீர்கள், தோல்வி மட்டுமே வாழ்க்கையல்ல – பெற்றோருக்கு "104" அறிவுரை
சென்னை: பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவு என மாணவர்களை பெற்றோர் திட்ட வேண்டாம் என பெற்றோருக்கு 104 சேவை மையம் அறிவுறுத்தி உள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இத்தேர்வில் கிட்டதட்ட 90.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பலரும் தேர்ச்சி பெற்றாலும், சில மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
அதிகரிக்கும் மன உளைச்சல்:
எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டாலோ, தேர்ச்சி பெறாவிட்டாலோ மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தவறான முடிவு எடுப்பது வழக்கமாக உள்ளது.
தற்கொலைக்கு தூண்டும் விரக்தி:
நல்ல மதிப்பெண் எடுத்தும் எதிர்பார்த்த கட் ஆப் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டோரும் உண்டு.
விழிப்புணர்வின்மையே காரணம்:
போதிய விழிப்புணர்வு இல்லாததும், சரியான வழிகாட்டல் இல்லாததுமே இதற்கு காரணம். இது போன்றோர் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் நல்ல மனநிலை பெற முடியும்.
பெற்றோரே கவனம் தேவை:
இதுகுறித்து 104 சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறுகையில், ''மதிப்பெண் குறைவால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புண்டு. பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும்.
கவுன்சிலிங் அவசியம்:
மாணவர்களை திட்டாமல் தேற்ற வேண்டும். முடியாவிட்டால் 104 க்கு அழையுங்கள். வாழ்வில் ஜெயிக்க உள்ள வாய்ப்புகள் குறித்து கவுன்சிலிங் தருகிறோம்'' என்றார்.