தற்கொலை செய்ய கிணற்றில் குதித்து.. காப்பாத்துங்க... காப்பாத்துங்க என அலறிய ஞானப்பிரகாசம்!
தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
Recommended Video
கரூர்: தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்தவரை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காப்பாற்றி உள்ளனர்.
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் 50. இவருக்கு நீண்ட நாட்களாக கடன் தொல்லை சிக்கிக் கொண்டு தவித்து வந்திருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஞானப்பிரகாசம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.
அதன்படி ராமகிருஷ்ணபுரம் இருப்பாதையை நோக்கி விரைவாக நடந்தார். அங்கிருந்த பாழடைந்த கிணற்றை நோக்கி வந்து தொபுக்கென்று குதித்தார். ஆனால் குதித்த சில வினாடிகளிலேயே கிணற்றுக்குள்ளே இருந்து ஐயோ, என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற அலறல் சத்தம் எழுந்தது.
பாழடைந்த கிணற்றிலிருந்து அபாய சத்தம் வருவதை கேட்ட அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், கிணற்றினுள் ஓடிவந்து எட்டிப்பார்த்தனர். அங்கே ஞானப்பிரகாசம் கிணற்றின் கால் அளவு இருந்த தண்ணீரில் நின்று கொண்டிருந்தார். கிணற்றில் நீர் குறைவாக இருந்ததால் அங்கிருந்த கற்கள் மீது மோதி ஞானபிரகாசத்துக்கு காயம் வேறு ஏற்பட்டுள்ளது. இதனால் வலியை பொறுக்க முடியாமலும், எப்படி மேலே வருவது என்று தெரியாமலும் விழித்துள்ளார் ஞானப்பிரகாசம். பின்னர்தான் காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் கயிறு கட்டி ஞானப்பிரகாசத்தை மேலே கொண்டு வந்து சேர்த்தனர். அத்துடன் அவரை கொண்டு போய் காவல்நிலையத்திலும் ஒப்படைத்தனர். ஆனால் ஞானப்பிரகாசத்தின் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாத போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டில் நீரின்றி கிணறு, குளங்கள் வற்றிக்கிடப்பதுகூட ஒரு சில நேரத்தில் சிலருக்கு நன்மைதான் போல!