திருப்பூர்: இந்து அறநிலையத்துறை பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை – மேலதிகாரி டார்ச்சர்
திருப்பூர்: திருப்பூரில் இந்து அறநிலையத்துறையில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலதிகாரியின் பாலியல் அவதூறு தொந்தரவு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்ணின் பெயர் திலகவதி என்பதாகும். இவர் திருப்பூர் லட்சுமி நகர் 3வது வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு நிவேதா என்ற 6 வயது குழந்தை உள்ளது.
திலகவதி கடந்த 4 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் கோட்டை ஈஸ்வரன் கோயிலில், தற்காலிக இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களாக, திலகவதியை சக ஊழியர் ஒருவரோடு இணைத்து, மற்றொரு ஊழியர் அவதூறு பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், திலகவதி மீது முதல்வரின் தனிப்பிரிவுக்கு யாரோ ஒருவர் புகார் அனுப்பி உள்ளார். இதையடுத்து, முதல்வர் தனிப்பிரிவிலிருந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி, திலகவதி தனது கணவர் ஸ்ரீதரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளதுடன், மன உளைச்சலிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த மின் விசிறியில் திலகவதி, தூக்கு போட்டுக் கொண்டார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலகவதி உயிரிழந்தார். அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி கருத்து கூறிய திலகவதியின் கணவர் ஸ்ரீதர், "எனது மனைவியுடன் சக ஊழியர் ஒருவரை இணைத்து, மற்றொரு ஊழியர் அவதூறு பரப்பி வந்துள்ளார் என்றார். இதுகுறித்து திலகவதி என்னிடம் வருத்தம் தெரிவித்தார். அதிகாரிகளிடம் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினேன். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மனஉளைச்சல் ஏற்பட்ட என் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு காரணமான ஊழியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில், மேலதிகாரிகள் தொந்தரவு காரணமாக ஊழியர்கள் தற்கொலை செய்வது தொடர்கிறது. தற்போது, வேறொருவருடன் தன்னை இணைத்துப் பேசியதாலும், அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும் பெண் ஊழியர் தற்கொலை செய்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.