எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா பிறந்த தினம்... இணையத்தில் நினைவு கூர்ந்த இளைஞர்கள்!
ஆச்சர்யமாகத்தான் இருந்தது.... மறைந்து எட்டாண்டுகளான பிறகும் எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாளான இன்று இளைஞர்கள் அவரைக் கொண்டாடும் விதம் பார்த்து.
எப்படிப்பட்ட பிரபலமாக இருந்தாலும், மறந்து சில மாதங்கள் ஆனதும் ஜஸ்ட் லைக் தட் கடந்து போகிற தலைமுறை இது. அதுவும் எழுத்தாளர்களை... ? பெருசாக கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
ஆனால் சுஜாதா அப்படியா... எழுத்துலகின் சூப்பர் ஸ்டார். வெறும் அலங்காரத்துக்காகவோ ஆர்ப்பாட்டத்துக்காகவோ சொல்லப்படும் வார்த்தை அல்ல. உண்மையாகவே அவரது ஆளுமை, தாக்கம் அப்படி.
அவர் மட்டும் தமிழில் இத்தனை நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள், விஞ்ஞானக் கதைகள், சங்க இலக்கியத்துக்கான தெளிவுரைகள், நாடகங்கள், குறிப்பாக கணிணி தொடர்பான புத்தகங்கள் எழுதாமல் போயிருந்தால்... நான்கு தலைமுறைகளுக்கு தமிழின் அடுத்தடுத்த பரிமாணங்களை அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைக்காமலே போயிருக்கும்.
தமிழுக்கு சுஜாதா செய்தது வெறும் பணியல்ல.. திருப்பணி. இதில் எந்த மிகையும் இல்லை.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு மூத்த மொழியை, கணிணிக்கு ஏற்றமாதிரியான நவீனத்துக்கு மாற்றியதில் சுஜாதாவின் பங்கு மகத்தானது.
விஞ்ஞானம் தெரிந்த எல்லாராலும் அதை சுவையாகச் சொல்லத் தெரியாது, எழுதவும் வராது. ஆனால் சுஜாதா அதில் 'பிரம்ம ராட்சஸன்'. தமிழ் நூல்கள் வாசிக்கத் தெரிந்த அனைவருமே ஒப்புக் கொள்வார்கள், அவர்கள் மிக சுவாரஸ்யமாக வாசித்த அறிவியல் புத்தகங்கள் சுஜாதா எழுதியவைதான் என்பதை. ஆங்கிலத்தில் உள்ள Authentic என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் சுஜாதா எழுதிய விஞ்ஞான நூல்கள் மற்றும் விஞ்ஞான அடிப்படையில் அமைந்த கதைகள்.
சொர்க்கத் தீவு அல்லது ஜீனோ அல்லது மேற்கே ஒரு குற்றம்... இப்படி எந்தக் கதையாக இருந்தாலும் அதைப் படிக்கும்போது நூறு சதவீத நம்பிக்கை இருக்கும்.
வருங்கால விஞ்ஞான வளர்ச்சியைக் கணித்துச் சொன்னதில் சுஜாதா ஒரு தீர்க்க தரிசி. கம்ப்யூட்டர், இணையம், செயற்கைக் கோள் விஞ்ஞானம், இன்றைய ஜிபிஆர்எஸ்... இவற்றையெல்லாம் எண்பதுகளிலேயே எழுதிவிட்டவர் சுஜாதாதான்.
தமிழை எத்தனை சுவாரஸ்யமான நடையில் எழுத முடியும் என்று காட்டியவர் அவர்தான். அவரது நான்கு நாவல்களைத் தொடர்ச்சியாக வாசித்தவர்களை அவரது எழுத்து நடை சுலபத்தில் தொற்றிக் கொள்ளும். இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரது நடையில் சுஜாதா சிரிப்பதை முதல் நான்கு பக்கங்களைக் கடந்த உடனே புரிந்து கொள்வீர்கள்!
எட்டாண்டுகள் அல்ல... இன்னும் ஒரு நூறு தலைமுறை கடந்த பின்னும் நிலைக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா... வள்ளுவர், பாரதி மாதிரி. அவரைப் படித்தவர்களுக்கு இது புரியும்!