அணி மாறுவேன் என சூளுரைத்த சூலூர் எம்எல்ஏ திடீர் பல்டி... கருத்தை வாபஸ் பெற்றார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கல்குவாரியை மூடவில்லை எனில் அணி மாறுவேன் என்று மிரட்டல் விடுத்த சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ், தற்போது தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
கோவை: சூலூர் அருகே பெரியகுயிலியில் உள்ள கல்குவாரியில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் எடப்பாடி அணியிலிருந்து வேறு அணிக்கு மாறி விடுவேன் என்று கூறிய சூலூர் எம்எல்ஏ கனகராஜ், கல்குவாரியை மூடிய பிறகு தனது கருத்தை வாபஸ் பெற்றார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பெரியகுயிலில் உள்ள கல்குவாரியில் நடந்த விபத்தில் காயமடைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டனர்.
இந்த விவகாரத்தில் கல்குவாரிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கல்குவாரியை எம்எல்ஏ ஆய்வு நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார்.
ரூ.50 கோடிக்கும் மேல் இழப்பு
அப்போது அவர் கூறுகையில், இந்த கல்குவாரியில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.50 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் விபத்துக்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்ய வில்லை.
முதல்வரிடம் வலியுறுத்துவேன்
இந்த பிரச்சினையில் கல் குவாரி உரிமையாளர்கள் யாரும் வரவில்லை. கல்குவாரியை சுத்தம் செய்து அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஆகியோரிடம வலியுறுத்துவேன்.
அணி மாறுவேன்
எனது கோரிக்கைக்கு அவர்கள் செவிமடுக்கவில்லை எனில் எடப்பாடி அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு மாறிவிடுவேன். நான் ஒரு மாதிரியான ஆளு. மக்களுக்கு பணியாற்றவே எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றுக் கொண்டேன்.
அதை செய்ய முடியவில்லை எனில் எனது பதவியை ராஜினாமா செய்யக் கூட தயங்கமாட்டேன் என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
கல்குவாரியின் உரிமத்தை கோவை ஆட்சியர் ஹரிகரன் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் தொழிலாளர்களின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
கருத்தை வாபஸ்
கல்குவாரி மீதான நடவடிக்கை குறித்து சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கூறுகையில், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நான் எம்எம்ஏ-வாக இருந்து என்ன பயன் என்று ஆதங்கத்தில் அணி மாறுவதாக கூறிவிட்டேன். தற்போது கல்குவாரி பிரச்சினைக்கு நடவடிக்கை எடுத்து விட்டதால் அணி மாறுவதாக நான் கூறிய கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.
எடப்பாடி அரசை காப்பாற்றிவிட்டார்
இன்னும் 6 எம்எல்ஏ-க்கள் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு சென்றுவிட்டால் ஆட்சி கவிழும் என்ற சூழ்நிலையில் சூலூர் எம்எல்ஏ-வின் அணி மாறும் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. கல்குவாரி விவகாரத்தில் அரசு துரிதகதியில் நடவடிக்கை எடுத்ததால் எடப்பாடி அரசு தற்போது தப்பித்தது.
வேலுமணியின் பதவியையும்...
கோவை மாவட்டத்தில் இருந்து கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. சின்னராஜ், கோவை வடக்கு எம்.எல்.ஏ. அருண்குமார் ஆகியோர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது, கனகராஜ் எம்.எல்.ஏ.வும் அணி மாறுவதாக அறிவித்திருந்ததால் அமைச்சர் வேலுமணியிடம் இருந்து புறநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனது கருத்தை வாபஸ் பெற்றதன் மூலம் வேலுமணியின் பதவியையும் காப்பாற்றிவிட்டார் கனகராஜ்.