எடப்பாடி பழனிச்சாமிக்கு மீண்டும் தலைவலியை கொடுக்கும் சூலூர் எம்எல்ஏ!
அதிமுகவின் இரு அணிகளும் சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கூறியுள்ள அதிமுக அம்மா கட்சியை சேர்ந்த சூலூர் எம்எல்ஏ கனகராஜ் பேசியிருப்பது எடப்பாடி பழனிச்சாமியை திக்குமுக்காட வைத்துள்ளது.
கோவை: அதிமுகவின் இரு அணிகளும் சேர்ந்து பாஜகவுட்ன் கூட்டடணி வைக்க வேண்டும் என அதிமுக அம்மா கட்சியை சேர்ந்த சூலூர் எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார். எம்எல்ஏவின் இந்த பேச்சால் முதல்வர் தரப்பு திக்குமுக்காடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில் இதோ அதோ என இழுபறி நிலவி வருகிறது. பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்றால் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் ஆகிய 2 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என தடாலடியாக கூறியுள்ளது ஓபிஎஸ் அணி.
பேச்சுவார்த்தை நடத்த காலம் கனிந்துவிட்டது, கதவு திறந்தே இருக்கிறது எனக் கூறி ஈபிஎஸ் அணியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சு என்கிற தங்களின் நிலைப்பாட்டில் நிலையாக உள்ளது ஓபிஎஸ் அணி.
மத்திய அரசுடன் இணக்கம்
இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூரில் அதிமுக அம்மா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ கனகராஜ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓ.பி.எஸ். அணியின் 2 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது என்றார். எனவே 2 அணிகளும் விரைவில் ஒன்றுசேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி
மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முடியும் என்றும் கனகராஜ் கூறினார். பாஜகவுடன் அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைந்து கூட்டணி வைத்துகொண்டால் நல்லது என்றார். ஏற்கனவே இரட்டை இலை முடக்கம், டிடிவி தினகரன் கைது உள்ளிட்ட விவகாரங்களுக்கு மத்தியில் ஆளும் பாஜகவே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
முதல்வரை திணறடிக்கும் எம்எல்ஏ
இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தான் நல்லது என சூலூர் எம்எல்ஏ பேசியிருப்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திணற வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூலூர் அருகே உள்ள பெரியகுயிலியில் தனியார் கல்குவாரியில் விதிமீறல்கள் இருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஏற்கனவே அதிர்ச்சி கொடுத்தவர்
அப்போது, குவாரி விபத்து குறித்து சரியான விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் வேறு அணிக்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்தார். சசிகலா அணியில் இருந்துகொண்டு அவர் இவ்வாறு பேசியது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து அமைச்சர்கள் சிலர் கனகராஜை சமாதானப்படுத்தினர்.
சும்மா இருக்க மாட்டாரா..
இந்நிலையில் இரு அணிகளும் சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் எம்எல்ஏ கனகராஜ். எம்எல்ஏவின் இந்தப் பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சலை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாரா என்றும் ஈபிஎஸ்க்கு நெருங்கிய வட்டாரங்கள் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.