முதல்வர் ஜெயலலிதாவுக்கு பா.ஜ.கவின் சுமித்ரா மகாஜன், காங்கிரஸின் பி.ஜே குரியன் வாழ்த்து!
சென்னை: தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், உங்களது தலைமையில் தமிழகம் முன்னேற்றமடையும் என நம்பிக்கை கொள்வதாக சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியனும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடாகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவரான குரியன், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருப்பது அக்கட்சியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.