ஈரோடு 103... கரூர், வேலூர், நாமக்கல் 102 டிகிரி - திருச்சி, வேலூரில் வெயில் அதிகரிக்குமாம்!
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையை நீடிக்கும் என்றும் திருச்சி மற்றும் வேலூரில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: கோடை காலம் தொடங்கும் முன்பே சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஈரோடு நகரில் 103 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஒரு வாரத்தில் திருச்சி மற்றும் வேலூரில் வெப்பம் அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . சென்னையில் இன்றைய வெப்பநிலை 93.2 பாரன்ஹீட்டாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்பம் அதிகரிப்பு
கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது குடைகள் பிடித்து கொண்டு செல்கின்றனர். சாலையோரங்களில் உள்ள குளிர்பானக்கடைகள், இளநீர், பழக்கடைகள் என மக்கள் தஞ்சம் அடைகின்றனர். குடிப்பதற்கு குளிர்ந்த நீரை பருகி வருகின்றனர்.
அனல் காற்று
இந்த ஆண்டும் கோடை வெயில் கடுமையாக இருக்கும் என்றும் குறிப்பாக ஆந்திரா , குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும், அனல் காற்று வீசும் என்று டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
கொளுத்தும் வெயில்
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரகாலமாகவே ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்லவே சிரமப்படுகிறார்கள்.
ஈரோடு 103 டிகிரி
கடந்த இரண்டு தினங்களாக ஈரோடில் வெப்பநிலை 103 டிகிரியாக பதிவாகியுள்ளது. ஈரோடு நகரில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தாகத்தை தணிக்க கரும்புச்சாறு, பழச்சாறு, மோர், கூழ், இளநீர், தர்ப்பூசணி, முலாம்பழம் போன்றவற்றையும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
வெயிலூர் ஆன வேலூர்
வேலூர், கரூர், நாமக்கல் நகரங்களில் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதே போல திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், மதுரை, கோவை திருப்பூரில் 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. ஒரு வாரத்தில் திருச்சி மற்றும் வேலூரில் வெப்பம் அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சென்னை 93.2 டிகிரி பாரன்ஹீட்
சென்னையில் 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகவில்லை. பிற நகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளது. மாலை நேரங்களில் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.