கோடைக்கு இதமாக ஜில் என தென்மாவட்டங்களில் கொட்டிய மழை
கன்னியாகுமரி: கொளுத்தும் வெயிலை குளிர்விக்க கொஞ்சமாய் மழை பெய்தாலே தனி இதம்தான். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அனலாய் தகிக்கிறது. அந்த அனலுக்கும் இதமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் கோடை மழை கொட்டி மக்களின் மனங்களை குளிர்வித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 100 டிகிரிக்கும் மேலாக கடுமையான வெப்பம் தாக்கி வந்த நிலையில், கன்னியாகுமரியில் இன்று அதிகாலை 5 மணியளவில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. திடீரென பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் இடைவிடாது கொட்டித் தீர்த்த சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.
இடி மின்னலுடன் மழை
ஆரல்வாய்மொழி, தோவாளை பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையினால் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. அங்கு இரண்டரை மணி நேரம் மழை பெய்தது. இரணியல், குளச்சல், முள்ளங்கினா விளை பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நாகர்கோவிலில் அதிகபட்சமாக 39 மி.மீ. மழை பதிவானது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. கோடைக்கு இதமாக கொட்டும் மழையினால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அணை நீர்மட்டம் உயர்வு
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 27.60 அடியாக இருந்தது. அணைக்கு 67 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 59.45 அடியாக இருந்தது. அணைக்கு 25 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 5.97 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர் மட்டம் 6.07 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 7.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 50.85 அடியாகவும் உள்ளது.
சூறைக்காற்றுடன் மழை
இதனிடையே நீலகிரி மாவட்டம் கூடலூர்-தொன்னூரில் சூறைகாற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்று வேகமாக வீசுவதால் கூரை ஓடுகள் பறந்தன. இதில் ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லையில் வெள்ளம்
இந்த நிலையில் நெல்லை, பாளை நகரில் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அடவி நயினார் அணை பகுதியிலும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடியில் இடி
இதைப்போல் தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இன்று காலை மழை பெய்தது. முத்தையாபுரம், முள்ளக்காடு, பழைய காயல், புல்லாவெளி மற்றும் கடற்கரை கிராமங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி நகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இன்றைய வெப்பநிலை
ஆங்காங்கே பெய்து வரும் மழை காரணமாக நேற்று வரை சதமடித்து வந்த வெயில் இன்று சற்றே குறைந்துள்ளது. சென்னையில் காலையிலேயே வெயில் சுட்டெரித்தாலும் நேரம் செல்லச் செல்ல சற்றே குறைந்து பிற்பகலில் 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேசமயம் சேலத்தில் 96.8 டிகிரி வெப்பமும்,கோவையில் 86 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை, திருச்சியில் 89.6 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. வானம் மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது. மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.