கொளுத்திய கோடைக்கு இதமாக கோவை, வால்பாறையில் கொட்டிய மழை!
கோவை: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கோவை, வால்பாறையில் நேற்று மாலையில் பெய்த மழை, அனலில் தவித்த மக்களை குளிர்வித்துள்ளது. மழை காலத்தில் விடாமல் பெய்யும் மழையை விட கோடை காலத்தில் சட்டென்று இடியும் மின்னலுமாய் கொட்டிவிட்டுப் போகும் மழைக்கு வரவேற்பு அதிகமாகத்தான் இருக்கத்தான் செய்யும்.
அக்னி நட்சத்திரத்திற்கு இன்னும் சிலவாரங்கள் உள்ள நிலையில் நேற்று வேலூர், சேலம், திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் வரை பதிவானது.
மதுரை, தருமபுரியில் தலா 99 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. பிற மாவட்டங்களைப் பொருத்தமட்டில் பெரும்பாலும் 88 முதல் 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் நிலவியது.
வால்பாறையில் மழை
ஒருபக்கம் வெயில் கொளுத்தி வந்தாலும் கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒருவார காலமாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த 2 நாட்களாகவே வால்பாறை நகர் பகுதியை தவிர ஒரு சில எஸ்டேட் பகுதிகளில் கன மழையும், பல்வேறு பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.
சாரலாக தொடங்கி
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு லேசான சாரல் மழையாக பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாய்ந்த மரம்
சுமார் 5 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு செல்லும் வழியில் பழைய வால்பாறை அருகே மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தேயிலை தோட்டங்களில்
மழை பெய்த நிலையிலும் வால்பாறை பகுதியை சுற்றி உள்ள இடங்களில் பனிமூட்டம் நிலவியது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மழையில் நனைந்து கொண்டே தேயிலை கொழுந்து பறிப்பதில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டினர். இருப்பினும் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. அதே போல் வால்பாறை நகரில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் திடீர் பலத்த மழையால் அவதிப்பட்டனர்.
பொள்ளாச்சியில் மழை
இதே போல் பொள்ளாச்சியிலும் நேற்று மாலை திடீரென்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உடுமலை ரோடு தொழிற்பேட்டையில் நின்றிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீட்டின் முன் விழுந்தது. நல்லவேளை அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து ரோட்டில் விழுந்தன.
குளிர்வித்த மழை
தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மரப்பேட்டை பள்ளத்தில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் நனைந்து கொண்டே சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் கடந்த சில நாட்களாக கொளுத்திய வெயிலுக்கு தற்போது பெய்த கோடை மழை தங்களை குளிர்வித்துள்ளதாக பொள்ளாச்சிவாசிகள் தெரிவித்தனர். இது போன்று ஆனைமலை பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையில் கொட்டிய மழை
கோவையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் புழுதி காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். பின்னர் மாலை 6 மணியவில் சுந்தராபுரம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இரவிலும் மழை பெய்தது. இதன் காரணமாக நகரில் வெப்பம் ஓரளவு தணிந்தது.
கன்னியாகுமரியில் மழை
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப் பாண்டியில் 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 40 மி.மீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, திருவாரூர், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், குடவாசல் ஆகிய இடங்களில் தலா 30 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் மேகமூட்டம்
அடுத்து வரும் 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே 82.95 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.