தாலாட்டிய வானம்.. தள்ளாடிய சென்னை... தடுமாறிய மக்கள்.. தத்தளித்த வாகனங்கள்!
சென்னை: சென்னையில், நீண்ட நாள் கழித்து நேற்று மூன்று மணிநேரம் கொட்டித்தீர்த்த கோடை மழைக்கு, முக்கிய சாலைகள், சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோடை காலம் தொடங்கும் முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது சென்னையில், சித்திரை பிறந்த உடன் கிளைமேட் மாறியது போல சில்லென்ற காற்று வீசி லேசாய் வீசி சாரல் மழை பெய்து போனது. புதன்கிழமையன்று அதிகாலை முதலே, வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. திடீரென காலை 9.30 மணிக்கு வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது.
தேங்கிய மழை நீர்
சட சட வென கொட்டத் தொடங்கிய மழை, பிற்பகல் 12:30 மணி நீடித்தது. கனமழையால் முக்கிய சாலைகளில், ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. ஜி.எஸ்.டி., சாலையில், எம்.ஐ.டி., மேம்பாலம் இறங்கும் இடம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, பல்லாவரம் -- துரைப்பாக்கம் சாலை, பல்லாவரம்-குன்றத்துார் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியது.
போக்குவரத்து பாதிப்பு
ஆலந்துார், தில்லை கங்காநகர், மீனம்பாக்கம் சுரங்க பாலங்களில் ஏழு அடி உயரத்திற்கு, மழைநீர் தேங்கியதால், நான்கு மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆலந்துார், பழவந்தாங்கல் சுரங்க பாலத்தில் தேங்கிய மழைநீர், பிற்பகல் 2:00 மணிக்கு, மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. அதன்பின், போக்குவரத்து சீரடைந்தது.
வெள்ளமென தேங்கிய நீர்
கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, போன்ற பகுதிகளில் சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. மழையால், ராஜிவ் காந்தி சாலை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் ஆகிய இடங்களில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் சிரமம்
மழை காரணமாக, அனைவரும் ஒரே இடத்திற்குள் ஒதுங்கியதால், பெரும்பாலான பேருந்து நிலையங்கள் நிரம்பி வழிந்தன. பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். ஒரு சில இடங்களில் மழைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் கீழே அடித்து தள்ளப்பட்டன. மேலும், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
ஊர்ந்த வாகனங்கள்
சென்னையில் ஐ.டி. நிறுவனங்களின் மையமாக திகழும், தரமணி, வேளச்சேரி, பெருங்குடி போன்ற பகுதிகளில் சாதாரணமாகவே போக்குவரத்து நெருக்கடி இருக்கும். இந்த நிலையில், நேற்று பெய்த மழை காரணமாக இந்த பகுதிகளில் வாகனங்கள் நத்தை ஊர்ந்தது போல் ஊர்ந்து சென்றன. இதனால், இந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புறநகரில் தேங்கிய வெள்ளம்
புறநகரில் தாழ்வான பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், மேடவாக்கம், கொட்டிவாக்கம், பெருங்குடி, உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
விமானநிலையத்தில் பாதிப்பு
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 101 மில்லிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது. விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் மழைநீர் வடிகுழாயில் அடைப்பு ஏற்பட்டதால், 1 மற்றும் 2-வது ‘கன்வேயர் பெல்ட்' (பயணிகளின் உடமைகளை எடுத்து வரும் எந்திரம்) பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதனால் எந்திரம் இயங்க முடியாமல் நிறுத்தப்பட்டது. இதனால் டெல்லி மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த பயணிகள், தங்களின் பொருட்களை உடனடியாக பெறமுடியாமல் காத்திருந்தனர்.
மண்ணடியில் திடீர் குளம்
மண்ணடி சாலை, பிராட்வே பிரகாசம் சாலை, எம்.கே.பி., நகர் மேற்கு நிழற்சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. மணலி விரைவு சாலை மற்றும் எண்ணுார் கடற்கரை சாலையிலும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
சேறும், சகதியுமாய்
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு செல்லும் சாலை முழுவதும் நேற்றைய மழைக்கு சேறும் சகதியுமாக மாறியது. அதன் வழியாக நடந்து வந்த பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் என, பலர் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.
மழைநீடிக்கும்
லட்சத்தீவின் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சம் 24 டிகிரி வெப்பமும் நிலவும் என்றும் ரமணன் கூறியுள்ளார்.
9 சென்டி மீட்டர் மழை
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு:
திருப்பூர் மாவட்டம் தர்மபுரம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டர் மழையும், காரைக்கால், ராமநாதபுரம் மாவட்டம் ராம்நாடு ஆகிய இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 6 சென்டி மீட்டர் மழையும், பாம்பன், தொண்டி, அறந்தாங்கி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
உள்மாவட்டங்களில்
ராமநாதபுரம், வேதாரண்யம், திருமயம், அதிராமபட்டினம், செங்கோட்டை, ஆகிய இடங்களில் தலா 4 சென்டி மீட்டர் மழையும், திருபுவனம், புதுச்சேரி, தர்மபுரி, பரமத்திவேலூர், திருவாரூர், பெருந்துறை, நெல்லை மாவட்டம் பாபநாசம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பெய்தது.