அக்னி வெயிலை குளிர வைத்த கோடை மழை - மின்னல் தாக்கி 7 பேர் பலி
அக்னி நட்சத்திர வெயில் அனலாய் அடிக்க, வெப்பத்தை தணிக்கும் வகையில் பல இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து, கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தை தணிக்கும் வகையில் பல பகுதிகளில் கோடை மழை கொட்டி வருகிறது. நேற்று இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த மழைக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோடை வெயில் காலை முதலே நேற்று வாட்டி எடுத்தது பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவானது. பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் அவதிப்பட்டனர். பலர் வீடுகளில் முடங்கினர்.
மாலை 5 மணியளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து குளிர்சியான காற்று வீசியது. இடியும் மின்னலுமாய் இரவு நேரத்தில் மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருமங்கலம், நெல்லை, குமரி என பல பகுதிகளில் கோடை மழை கொட்டியது.
இடி, மின்னலுடன் மழை
சென்னையிலும் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், கிண்டி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது, இதனால் இரவு நேரங்களில் இதமான காற்றும் வீசியது.
தணிந்த வெப்பம்
திருவள்ளூர் மாவட்டத்திலும் பல இடங்களில் நேற்று காலையில் கொளுத்திய அக்னி வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரம் திடீரென பலத்த மழை பெய்ததால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த மழையால், சுட்டெரித்த அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து, நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை மழை பலி
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறழ. நேற்று மாலை முதலே சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. திருமங்கலத்திற்கு அருகே உள்ள இரண்டு கிராமங்களில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
மின்னல் தாக்கி மரணம்
திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கர் ராஜ் இவர் வழக்கம் போல் விறகு வெட்டி கொண்டிருந்த பொழுது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
சிறுவன் மரணம்
அரிட்டாபட்டியை சேர்ந்த 8 வயது சிறுவன் வெளி யே விளையாடி கொண்டிருந்த பொழுது மின்னல் மின்சார வயர் மீது தாக்கியதில் வயர் அறுந்து சிறுவன் மீது விழுந்ததில் மரணமடைந்தான்.
பெண் பலி
கரிசல்காளம் பட்டியை சேர்ந்த ஆராயி என்ற பெண் தோட்ட வேலை பார்த்து கொண்டிருந்த பொழுது மின்னல் தாக்கி உயிரழந்தார். ஒரே தாலுகாவில் வெவ்வேறு கிராமங்களில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை மழைக்கு 7 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.