கோடை விடுமுறை: ஏப்ரல் 7ல் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்
நெல்லை: கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் 7ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதற்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு தினமும் வியாபாரம் மற்றும் பணி நிமித்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வழக்கமாக நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழியும்.
இந்த காரணத்தால் விழாக்காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் கூடுதல் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு ரயில் இயக்கப்படும். வரும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி விடுமுறையின் போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு எண் 06001 சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் அடுத்த மாதம் 7ம் தேதி இரவு 8.20 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கோடை ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நி்ன்று செல்லும். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.