கசிவு நீர்க் குட்டைகள் தயார்... வண்டலூர் உயிரியல் பூங்காவில் தண்ணீர்ப்பஞ்சம் வராது!
வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள கசிவு நீர் குட்டைகளால் கோடை கால தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என பூங்கா இயக்குனர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் ரெட்டி, நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதில் பூங்காவில் உள்ள விலங்குகள் பற்றியும், தண்ணீர் தட்டுப்பாடு நிலவாது என்றும் தெரிவித்துள்ளார்.
1600 விலங்குகள்:
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகையைச் சேர்ந்த 163 இனங்களும், 1,600 விலங்குகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வாழும் உயிரினங்கள்:
இப்பூங்காவில் உள்ள இயற்கையான வனப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் மற்றும் முள்ளம்பன்றி, நரி, கீரி, பாம்புகள், உடும்பு, காட்டுமுயல், மயில் போன்ற பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
அதிகரிக்கும் தண்ணீர் தேவை:
இந்த உயிரினங்களின் அடிப்படை தேவைக்கும், அடைப்பிடங்களை சுத்தம் செய்வதற்கும் தண்ணீர்த் தேவை மிக அதிகமாகும். மேலும் பார்வையாளர்களுக்கான குடிநீர், கழிவறை பயன்பாடு, பூங்கா பணியாளர்கள் குடியிருப்புத் தேவை, தோட்டப்பராமரிப்பு என பூங்கா பராமரிப்பிற்கு தண்ணீர் மிக அத்தியாவசியமானதாகும்.
5 லட்சம் லிட்டர் தண்ணீர்:
இப்பூங்காவில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் 90 சதவீதம் தண்ணீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இப்பூங்காவின் ஒரு நாள் சராசரி தண்ணீர்த் தேவை சுமார் 5 லட்சம் லிட்டர் ஆகும்.
குறையும் நிலத்தடி நீர்:
இப்பூங்காவின் தண்ணீர்த் தேவை முழுவதும் நிலத்தடி நீரையே நம்பி உள்ளது. பூங்காவின் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வரும் நகரமயமாக்கலினால் ஏற்படும் நிலத்தடி நீர்மட்டம் குறைவு, உறுதி அற்ற பருவமழை போன்ற காரணங்களினால் இப்பூங்காவில் மழைநீர் சேகரிப்பு பணி அவசியமாகிறது.
துல்லியமான புள்ளி விவரங்கள்:
எனவே 602 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவின் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான புள்ளி விவரங்கள் துல்லியமாக சேகரிக்கப்பட்டு வடிகால் வரைபடம் தயாரிக்கப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு:
அதன்படி மழைநீர் வழிந்தோடும் ஓடையில் குறுக்காக அடுத்தடுத்து 18 கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் மழைநீர் நிரம்பிய ஒரு குட்டையில் இருந்து வெளியேறும் நீர் அடுத்த குட்டையை நிரப்பும் வகையில் அனைத்துக் குட்டைகளும் வடிவமைக்கப்பட்டன. இதன் மூலம் பூங்காவின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கிடைக்கும் மழைநீர் அனைத்தும் சேகரம் செய்யப்பட்டது.
கசிவு நீர் குட்டைகள் மூலம் நீர்வரத்து:
மேலும் மேற்படி கசிவு நீர் குட்டைகள் பூங்காவின் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ள திறந்தவெளி கிணறுகளைச் சுற்றிலும் இருக்குமாறு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.