சூரியன் சுட்டெரிக்கும்...112 டிகிரி வெயில் கொளுத்தும்.. ரமணன் சார் ஆபீஸிலிருந்து ஒரு "எச்சரிக்கை"
சென்னை: தமிழகத்தில் இந்த கோடை காலம் மிகவும் அனலாக இருக்கும் என்று வானிலை மையம் இப்போதே அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. வீட்டுக்குள் இருக்க முடியாத அளவுக்கு புழுங்க ஆரம்பித்துள்ளது. வெட்கை தெரிகிறது. உடம்பு சுடுகிறது. வெயில் காலத்துக்கேற்ற அத்தனை அறிகுறிகளையும் மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர்.
வட தமிழகத்தில் கூட வெட்கை அதிகமாக இல்லை. ஆனால் தென்னகத்தில் வெயில் அதிகமாகவே உணரப்படுகிறது. வெயில் வெளுக்க ஆரம்பித்து விட்டது.
காற்றின் ஈரப்பதம் குறைவதால் வெப்பம் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது பரவலாக 95 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதாகவும் கோடை காலத்தில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
குறிப்பாக வெயில் தலைநகரான வேலூர், திருச்சி, சேலம், பாளையங்கோட்டையில் இதை விட வெயில் அதிகம் காணப்படும் என்றும் எச்சரிக்கிறது வானிலமை மையம். ஏப்ரல் மாதத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்யவும் வாய்ப்பு உண்டாம்.,
தமிழகத்தில் தற்போது 98 டிகிரி வெயிலாக அதிகபட்ச வெப்ப நிலை உள்ளது. அது மதுரையில் பதிவாகியுள்ளது. சென்னையில் 92 டிகிரி அளவில்தான் உள்ளது. ஆனால் படிப்படியாக இது அதிகரிக்குமாம்.
வந்துருச்சு கிர்ணி
சென்னையில் வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் உஷ்ணத்தைத் தணிக்கும் கிர்ணி பழம், தர்பூசணி ஆகியவற்றின் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் இளநீர் விற்பனையும் சூடாகியுள்ளது.