தலைதூக்கும் வெயில் அச்சுறுத்தும் மின்வெட்டு: அச்சத்தில் மாணவர்கள்
நெல்லை: பனிக்காலம் முடிந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் மின்வெட்டு தலைகாட்டத் தொடங்கியுள்ளது.
கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக சென்னை தவிர மற்ற மாவட்ட நகர்ப்பகுதிகளில் ஒரு மணி நேரமும், கிராமங்களில் 2 மணி நேரமும் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை, இந்த நிலை நீடித்தது.
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 8 முதல் 16 மணி நேரம் வரைகூட மின்வெட்டு அமலில் இருந்தது. மின்வெட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண, மேட்டூர், வடசென்னை, வள்ளூர் மற்றும் தூத்துக்குடியில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மின் உற்பத்தி அதிகரிப்பு
இதில் மேட்டூர், வள்ளூர் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. வடசென்னை அனல் மின் நிலையத்தில் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே, காற்றாலைகளிலும் மின் உற்பத்தி அதிகரித்ததால், சில மாதங்களாக மின்வெட்டு குறைந்திருந்தது.
கைவிடாத காற்றாலைகள்
இந்த ஆண்டில் சீசன் முடிந்த நிலையிலும், காற்றாலைகளில் 500 மெகாவாட்டுக்கு அதிகமாகவே தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி யானது. மேலும், குளிர்காலம் என்பதால் மின் தேவையும் குறைந் தது. அதனால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப் பட்டது.
தலைகாட்டும் வெயில்
தற்போது பனி மறைந்து விட்டது. அதற்கு மாறாக காலை 7 மணி முதலே வெயில் தலை காட்ட துவங்கி விட்டது. இதனால் ஏசி, பேன் போன்ற மின்சாதன பொருட்களின் நுகர்வு அதிகரித்துள்ளதால் மின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இதனால் மின் பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின் தடை மீண்டும் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் மின்வெட்டு
இந்நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் மின்வெட்டு தொடங்கியுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகள் மற்றும் மாவட்ட நகரப் பகுதிகளில் ஒரு மணி நேரமும், கிராமங்களில் 2 மணி நேரம் வரையிலும் மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது. மின் வெட்டு நேரம் படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 8 மணி வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது.
அச்சத்தில் மாணவர்கள்
தற்போது பிளஸ்டூ மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் பொது தேர்வும் தொடங்க உள்ளது. அதற்காக அவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.
கோடையில் எப்படி?
படிப்படியாக மின்தடை நேரம் அதிகரித்து வருவதால் கோடை காலத்தில் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். குறிப்பாக இனி கோடை காலங்களில் இரவு நேரத்திலும் மின்தடை ஏற்படும். அதை எப்படி சமாளிப்பது என தீவிரமாக யோசிக்க தொடங்கியுள்ளனர்.
விவசாயிகள் கவலை
நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா நெற் பயிர்கள் தற்போது முழு வீச்சில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தாளடி பயிரும் அறுவடைக்கு வந்திருப்பதால் ஆள் பற்றாக் குறையும் ஏற்பட்டிருக்கிறது.
மின்வெட்டினால் பாதிப்பு
வாகனங்கள் ஏற்பாடு செய்து அரசின் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் மூட்டைகளை ஏற்றிவரும் விவசாயிகள் அங்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு நிலவும் கடுமையான மின்வெட்டுதான் இதற்கு காரணம். மணல்மேடு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது.
விற்பனை செய்ய தாமதம்
இதன் காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல்லை உடனடியாக விற்பனை செய்ய முடியவில்லை. மின்சாரம் இருந்தால்தான் சுத்தம் செய்யும் இயந்திரம் இயங்கும். சுத்தப்படுத்திய பிறகே நெல்லை விற்கமுடியும். இதனால் சுத்தம் செய்யும் இடத்தில் தங்களது நெல் மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு பல நாட்களாக விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.
ஏன் தட்டுப்பாடு?
இந்த ஆண்டு சீசனுக்குப் பிறகும் காற்றாலை மின் உற்பத்தி குறையாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு வரை காற்றாலைகள் மூலம், 850 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியானது. மேலும் புதிய மின் நிலையங்களில் சோதனை ஓட்டம் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைத்தது. இதனால் மின்வெட்டு இல்லாமல் இதுவரை சமாளிக்கப்பட்டது. வெயில் காலம் தொடங்குவதால் மின்சாரத் தேவை அதிகரிக்கும். காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துவிடும். எனவே, மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.