மாறன் பிரதர்ஸ், பாரிவேந்தர், ராமதாஸை முன்வைத்து 'நாறடித்துக் கொள்ளும்' டிவி சேனல்கள்
சென்னை: தமிழ் செய்தி டிவி சேனல்கள் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறதோ இல்லை தங்களுக்கு 'எதிரி'என போட்டி சேனலை கங்கணம் கட்டிக் கொண்டால் அவர்களை நாறடித்து விடுவதில் முனைப்பு காட்டுகின்றன.
தமிழகத்தில் டிடி செய்திகள்தான் நம்பிக்கைக்குரியதாக இருந்தது... பின்னர் சன் டிவி வந்த போது 8 மணி செய்திகள் ஒளிபரப்பாகாத வீடுகளே இல்லை எனலாம்.
சன் டிவியும் சன் நியூஸ் சேனல் என பிரத்யேகமாக செய்தி சேனலை தொடங்கியது. அதே காலகட்டத்தில் ராஜ்டிவி உள்ளிட்ட மற்ற சேனல்கள் வந்தபோதும் சன் நியூசுக்கு மவுசு இருந்து வந்தது.
சன் டிவி- கருணாநிதி குடும்ப மோதல்
சன் டிவி குழுமத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் தகராறு வந்தது முதல் திமுகவினர் கலைஞர் டிவியைத்தான் பார்த்து வருகின்றனர். சன் குழுமத்தை பெரிதாக திமுகவினர் நம்புவதும் இல்லை.
புதிய தலைமுறையால் ஆட்டம்
புதிய தலைமுறை வந்த பிறகு சன் நியூஸ் சேனல் ஆட்டம் கண்டது... இத்தனைக்கும் சன் நியூஸ், சன் டிவியில் பணிபுரிந்த பலரும் புதிய தலைமுறைக்கு தாவியவர்கள்.. ஆனால் சன் நியூசால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இதனால் கேபிள் ஒளிபரப்பை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சன்குழுமம் புதிய தலைமுறை ஒளிபரப்பை இருட்டடிப்பு செய்வது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது என குடைச்சல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இரு சேனல்களும் பரம எதிரிகளாகிப் போய்விட்டன..
மாறன் பிரதர்ஸ்- பாரிவேந்தர்
இதனால் ஒருவரை ஒருவர் 'நாறடித்து' கொள்வதில் தயக்கமே இல்லாமல் செய்திகளைப் போட்டுத் தாக்கி வருகின்றனர். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளுக்கு புதிய தலைமுறை அதிக முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிடுகிறது.
பாரிவேந்தர்- ராமதாஸ்
இதற்கு பதிலடியாக புதிய தலைமுறை உரிமையாளர் பாரிவேந்தர் மீதான ஒரு சிறு வழக்காக இருந்தாலும் சன் நியூஸ் விடுவதில்லை... திரும்ப திரும்ப போட்டு நாறடித்து திருப்தி அடைந்து கொள்கிறது. சன் குழுமத்துடன் மோதுகிற புதிய தலைமுறை தன்னுடைய இன்னொரு எதிரி பாமக நிறுவனர் ராமதாசையும் விட்டு வைக்கவில்லை.
ராமதாஸ் மகள்- நில அபகரிப்பு
திரைப்பட தயாரிப்பாளர் மதன் விவகாரத்தில் பாரிவேந்தரின் எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு எதிராக காட்டமாக அறிக்கை வெளியிட்டவர் ராமதாஸ். அதற்கு என்னிடம் காசுவாங்கியவர்தானே நீங்கள் என பாரிவேந்தர் பதிலடி கொடுத்திருந்தார்... இந்த பஞ்சாயத்து இன்னமும் முடியவில்லை. தற்போது ராமதாஸ் மகள் மீதான நில அபகரிப்புப் புகாரை முன்வைத்து ஒரு ஸ்டோரியை ரெடி செய்து திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது புதிய தலைமுறை.
மக்களுக்கான செய்திகளைக் கொடுக்க வேண்டிய இத்தகைய செய்தி சேனல்கள் தங்களது எதிரிகள் மீதான வன்மத்தை தீர்ப்பதிலேயே குறியாக இருப்பது ஜனநாயகத்தின் 4-வது தூண்களுக்கு அழகானது அல்லவே!