கிருஸ்துமஸ் கூட்ட நெரிசல்: மங்களூர், ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: கிருஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து மங்களூருக்கும், செங்கல்பட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.24ம் தேதி பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06154) மறுநாள் காலை 6.30 மணிக்கு மங்களூர் சென்றடையும். மங்களூரில் இருந்து டிசம்பர்.25ம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்(06155) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்ட்ரல் வந்துச் சேரும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு சொரனூர் உட்பட பல்வேறு ரயில்நிலையங்களில் நிற்கும்.
ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 25, ஜனவரி1, 8 தேதிகளில் வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணிக்கு புறப்படும் வாரந்திர சிறப்பு ரயில்(06140) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டு போய்ச்சேரும். செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 26, ஜனவரி 2, 9 தேதிகளில் சனிக்கிழமை பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06141) அதிகாலை 2.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை வழியாகச் செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.