கண்ணா ட்ரெயின்ல பார்த்து பத்திரம்மா போ... ரயில்வே ஸ்டேஷனில் ‘ரஜினி’ குரல்!
சென்னை: ரயில் பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குரலில் மிமிக்ரி செய்யப்பட்டு ரயில் நிலையங்களில் ஒலிபரப்பு செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
‘தலைவா நீ ஆணையிடு தட்டாது தமிழ்நாடு' என ரஜினியிடம் வாக்குறுதி கொடுத்துள்ளனர் அவரது ரசிகர்கள். பொதுவாக நமது நாட்டில் சினிமாவிற்கென்று தனி மவுசு உள்ளது. மற்ற பிரபலங்கள் கூறுவதைக் காட்டிலும் சினிமா நட்சத்திரங்கள் கூறும் கருத்துக்கள் எளிதாக, விரைவாக மக்களைச் சென்றடைந்து விடுகிறது.
திரை நட்சத்திரங்களின் இந்த மந்திர சக்தியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் அரசாங்கம், பல விழிப்புணர்வுத் தகவல்களை அவர்கள் வாயிலாக மக்களுக்குக் கொண்டு செல்கிறது.
அந்தவகையில், சூப்பர்ஸ்டார் ரஜினியின் குரலை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்.
என் வழி தனி வழி...
ரயில் பயணங்களில் பாதுகாப்பாக இருக்க பயணிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கூறி வருகிறது ரயில்வே நிர்வாகம். ஏதோ அறிவிப்பு என அதனை எடுத்துக் கொள்ளாமல் மக்கள் கவனமுடன் அதைக் கவனிக்க புது ஐடியா செய்துள்ளது.
நான் ஒருவாட்டி சொன்னா....
அதாவது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குரலில் ரயில் பயணத்தில் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைத் தகவல்கள் ரயில் நிலையங்களில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.
சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா...
சாதாரண கம்யூட்டர் வாய்சாக இல்லாமல் சூப்பர்ஸ்டார் பேசுவது போல் மிமிக்ரி கலைஞரை வைத்து இந்த எச்சரிக்கைத் தகவல்கள் பதிவு செய்யப் பட இருப்பதால் மக்கள் ஆர்வமுடன் அதை விரும்பிக் கேட்பர் என நம்புகிறது ரயில்வே நிர்வாகம்.
ரஜினி ஒரு தடவைச் சொன்னா...
கூடிய விரைவில் ரயில் நிலையங்களில் ரஜினி வாய்ஸைக் கேட்கலாம் எனத் தெரிகிறது. ரஜினி பேச்சைக் கேட்டாவது நம்ம பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.