"அண்ணனை" வரவேற்ற ஆதரவாளர்கள்.. "திஹார் கொண்டான்" டிடிவி இன்று சென்னை வருகை!!
சென்னை: ஒரு மாத சிறைவாசத்திற்கு பிறகு நீதிமன்றம் அளித்த ஜாமினையடுத்து விடுதலையாகியுள்ள அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட விவகாரத்தில் லஞ்சம் கொடுத்து சின்னத்தை பெற முயற்சித்ததாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 22ல் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட தினகரன் 4 நாள் விசாரணைக்குப் பின்னர் ஏப்ரல் 26ல் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து டெல்லி திஸ் ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே1ம் தேதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சரியாக 32 நாட்கள் சிறையில் இருந்த தினகரன் மற்றும் அரவது நண்பர் மல்லிகார்ஜூனாவிற்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில் நேற்று மாலை தினகரன், மல்லிகார்ஜூனாவை விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது.
|
சிறை வாசலில் போஸ்டர்
தினகரன் விடுதலையானது அதிமுகவினர் அனைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது. தினகரன் விடுதலையாகும் செய்தியையறித்ததும் அவரது ஆதரவாளர்கள் கையில் பூங்கொத்துகளுடன் திஹார் சிறை வாசலில் மாலை 5 மணி முதலே காத்திருக்கத் தொடங்கினர். திஹார் சிறை அருகே இருந்த சுவரொட்டிகளில் ஆங்கிலத்தில் அம்மா வழியில் கட்சியை வழிநடத்த வா தலைவா என்று வலியுறுத்தும் போஸ்டர்களும் அமர்க்களப்பட்டன.
|
புறவாசல் வழியே வெளியேறினார்
சரியாக இரவு 9.30 மணியளவில் தினகரன் திஹார் சிறையில் இருந்து விடுதலையானார். ஆனால் பாதுகாப்பு காரணங்கள் என்று கூறி முன்பக்க கேட் வழியாக வராமல், பின்பக்க வாசல் வழியாக சென்றுவிட்டார். இது முன்கூட்டியே செய்யப்பட்ட ஏற்பாடு போல தினகரனின் மனைவி அனுராதா பின்பக்க வாசலில் அவருக்காக காத்திருந்தார்.
|
அட்டன்டண்ஸ்
இதனையடுத்து தனியார் விடுதி ஒன்றில் தங்கிய டிடிவி தினகரனை அவரது ஆதரவு சகாக்கள் சந்தித்தனர். தங்கதமிழ்செல்வன், டி.கே.எம்.சின்னையன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள், அதிமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட 5 எம்.பி.க்களும் நேரில் சந்தித்தனர்.
உற்சாகம்
இந்த சந்திப்பிக்குப் பின் எம்எல்ஏ தங்கத் தமிழ்செல்வன் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டாராம். எங்கள் அணியை சேர்ந்த 122 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக உள்ளோம், அம்மா காட்டிய வழியில் ஆட்சி தொடரும் என்றாராம்.
மறுபடியும் முதல்லேருந்தா?
இதில் என்ன புதிதான விஷயம் வழக்கமாக அதிமுகவினர் சொல்வதுதானே என்று நினைக்கிறீர்களா, அங்கே தான் டுவிஸ்ட். மேற்கூறியவற்றை சொன்ன கையோடு அதிமுகவில் பிளைவு இல்லை, கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தான், துணை பொதுச்செயலாளர் தினகரன் தான், முதல்வர் பழனிச்சாமி தான் என்றும் உற்சாக கூக்குரலிட்டாராம். இந்நிலையில் டிடிவி தினகரன் இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு பிற்பகல் சென்னை வந்தடைகிறார்.