காங்கிரஸ் நேர்காணலில் குஷ்பு.. யசோதாவுடன் சேர்ந்து கேள்வி கேட்டார்.. ப.சி குரூப் புறக்கணிப்பு!
சென்னை: தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும். அதற்கான நிதி ஆதாரம் என்ன உள்ளது? என்று காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வரும் நேர்காணலை முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 10 முதல் 17ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 234 தொகுதிகளுக்கும் 3 ஆயிரத்து 216 பேர் விருப்ப மனுக்கள் வந்திருந்தன. இதையடுத்து, வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல், அந்தந்த மாவட் டங்களில் பிப்ரவரி, 25 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 31 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 31 மாவட்டங்களிலும் நேர்காணல் தொடங்கியது. சென்னை மாவட்டத்துக்கான நேர்காணல் மாநில தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ டி.யசோதா விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார். அப்போது குஷ்புவும் உடனிருந்தார்.
கேள்விகள் என்னென்ன?
நேர்காணலின் போது எவ்வளவு ஆண்டு உறுப்பினராக இருக்கிறீர்கள், வகித்த பதவிகள் என்னென்ன? தொகுதிக்கு ஆற்றிய பணிகள் என்ன? போட்டியிட விரும்பும் தொகுதியில் கட்சிக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது? என்று கேட்கப்பட்டது.
எவ்வளவு செலவு
கூட்டணி கட்சிக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது? தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும். அதற்கான நிதி ஆதாரம் என்ன உள்ளது?
என்ன ஜாதி, ஜாதிவாரியாக தொகுதியில் உள்ள வாக்குகள் எத்தனை? என்பன போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.
பல கோடி செலவு
சேலம் மாவட்டத்தில் பலர் தேர்தல் செலவாக ரூ.1.50 கோடி என்றும் ரூ.2 கோடி வரை செலவு செய்வோம் என்றும் தெரிவித்தனர். இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் உசிலம்பட்டி தொகுதியில் சீட் கேட்ட தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் ரூ.6 கோடி செலவு செய்யத் தயார் என்றாராம். நேர்காணலுக்கு வந்த பலரும் சீட் கிடைக்கிறதோ இல்லையோ இதுபோல அழைத்துப் பேசியதையே பெரிய விசயமாக கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
ப.சி, தங்கபாலு ஆதரவாளர்கள் புறக்கணிப்பு
இந்த நேர்காணலை ப.சிதம்பரம் ஆதரவு மாவட்டத் தலைவர்களான கராத்தே தியாகராஜன் (தென் சென்னை), புஷ்பராஜ் (புதுக்கோட்டை), சத்திய மூர்த்தி (சிவகங்கை), வெங்கடாசலம் (திருப்பூர்), ரவிச்சந்திரன் (மதுரை வடக்கு), ராதாகிருஷ்ணன் (கடலூர்), ஆர்.சி.பாபு (திருச்சி), பி.ஜி.ராஜேந்திரன் (தஞ்சாவூர்) மற்றும் தங்கபாலு ஆதரவு மாவட்டத் தலைவர்களும் புறக்கணித்தனர்.
தன்னிச்சையாக செயல்படுவதா?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனைவரையும் அரவணைத்துச் செல்லாமல் தன்னிச்சையாக விருப்ப மனுக்கள் பெறுதல், நேர்காணல் என நடத்தி வருகிறார். எனவே, நேர்காணலை புறக்கணித்துள்ளோம். இது தொடர்பாக ராகுல்காந்தியிடம் புகார் தெரிவிக்க இருக்கிறோம் என்று ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.