அமைதி வழி போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது: ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்
சென்னை: மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரியும், திமுக சார்பில் திருச்சியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீட் தொடர்பான போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது.
இதையடுத்து போலீசாரும் இந்த கூட்டத்திற்கு தடை விதித்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
மொத்தமாக ஊர்வலமோ, போராட்டமோ நடத்த கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை அப்படி சொல்லியிருந்தால் அது தவறு. ஏனெனில், அரசமைப்பு சட்டம், பிரிவு 19 (1)-ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளின் கீழ் அறவழியில், அமைதி வழியில் கூட்டம் கூட, போராட்டம் நடத்த உரிமையுள்ளது. இந்த உரிமையை அரசு பறித்தால் அதை சொல்ல வேண்டிய இடம்தான் சுப்ரீம் கோர்ட். எனவே அதை கோர்ட்டே பறிக்காது என நம்புகிறேன். பறித்தால் அது தவறு.
நீட் வேண்டாம் என்று கேட்பது தவறாகாது. 7 கோடி மக்களின் சார்பாக தமிழக சட்டசபையே நீட் தேர்வை ரத்து செய்ய கோரியுள்ளது. எனவே இதை தவறு என்று சுப்ரீம் கோர்ட் கூற முடியாது. தமிழக அரசு சுப்ரீம்கோர்ட் கூறியதை வைத்து பொதுக்கூட்டத்திற்கு தடை விதித்தால் அது ஜனநாயக படுகொலையாகும். அவசர நிலையை பிரகடனம் செய்ததை போலவாகும்.