சட்டத் தடைகளைத் தகர்த்த ஜல்லிக்கட்டு.. அலங்காநல்லூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரவித்துள்ளது. இதனை மதுரை அலங்காநல்லூர் பகுதி மக்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.
மதுரை: ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஜல்லிக்கட்டு நடத்த எந்த தடையும் வராது என்பது உறுதியாகியுள்ளதால் அலங்காநல்லூர் பகுதி மக்கள் வெடி வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் புரட்சி காரணமாக தமிழக அரசு கடந்த 21ஆம் தேதி அவசரச்சட்டம் கொண்டு வந்தது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதையடுத்து சட்டசபையில் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எந்த தடையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் பொதுமக்கள் வெடி வெடித்து கொண்டாடினர். இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.