விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய முடியாது... உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி : தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மூன்று தேமுதிக எம்எல்ஏக்கள் மீது தமிழக அரசின் சார்பில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து அதனை தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் தே.மு.தி.க சார்பில் ஜி.எஸ்.மணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்லா சி பந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஏற்கனவே அவதூறு சட்ட பிரிவுகளை நீக்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
அந்த தீர்ப்பு வழங்கப்படும்போது இந்த மனுக்கள் மீதான உத்தரவும் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.