ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு அனுமதி அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து 'பீட்டா' அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 12ல் விசாரணைக்கு வருகிறது.
டெல்லி : ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு அனுமதி அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து 'பீட்டா' அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 12ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிற்பகல் 3 மணியளவில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. இதனை அடிப்படையாகக்கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முழுமையாக தடை விதித்தது.
இதனால் 2015, 2016ம் ஆண்டுகளில் தமிழத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது.
பீட்டா தொடர்ந்த வழக்கு
இதனையடுத்து இந்திய மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு சார்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இருந்த தடை நீங்கியது. ஆனால் 'பீட்டா' அமைப்பு தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு சட்டதிருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை கடந்த மாதம் தாக்கல் செய்தது.
மனித உயிர்கள் இழப்பு
அதில், தமிழக அரசு சட்டதிருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதித்தது உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறும் செயல். மேலும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள விலங்குகளுக்கான ஐந்து அடிப்படை உரிமைகளை மீறுவதாக தமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது. இச்சட்டம் நிறைவேற்றிய பிறகு நடந்த போட்டிகளில் ஐந்து காளைகள், 15 மனிதர்கள் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிருக்கு சேதம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரத்து செய்ய வேண்டும்
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட்ட போட்டிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், திருநல்லூர், மறவபட்டி உள்ளிட்ட இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா சமர்ப்பித்துள்ளது. எனவே, தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசு பதில் தர உத்தரவு
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கான்வில்கர், சந்திரசூட் அமர்வு இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அளித்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 12ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
|
3 மணியளவில் விசாரணை
டிசம்பர் 12ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் வழக்கு விசாரணைக்கு வருவதாக உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் என்ன கருத்து தெரிவிக்கப் போகிறார்கள் என்பதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.