காவிரி: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது- முத்தரசன் குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு துரோகம் செய்ய முடிவெடுத்து தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மே 14ம் தேதி காவிரி வரைவு திட்டத்தை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, மீண்டும் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பால் தமிழக விவசாயிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்க மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு உச்சநீதிமன்றமும் தொடர்ந்து துணை போகிறது. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே காவிரி விவகாரத்தில் முடிவெடுக்கப்பட்டு வருவது தமிழக விவசாயிகளின் மீதும், மக்களின் மீதும் அரசின் பாராமுகத்தையே காட்டுகிறது.
கடந்த மே 3ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் கொடுக்க உத்தரவிட்டதை கர்நாடகம் மறுத்துவிட்டது. ஆனால், அதுகுறித்து உச்சநீதிமன்றம் இந்த முறை எந்தக் கேள்வியும் எழுப்பாதது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு, உச்சநீதிமன்றம் , மாநில அரசு மூன்றும் நாடகம் ஆடுகின்றன. எனவே, அரசியல் கடந்த மக்கள் போராட்டங்களின் மூலமே இந்த விவகாரத்தில் தீர்வு காணப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.