தமிழக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட கோரும் மனு.. சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த ஆணையில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ததது.
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 14-க்குள் நடத்த வேண்டும் என்பது தொடர்பாக சென்னா ஹைகோர்ட் பிறப்பித்த ஆணையில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
தமிழக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த இருந்தது.
இதுதொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முறையாக பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை என்றும், எனவே தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாகவும் கூறினார்.
மேலும், புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, கடந்த டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாநில தேர்தலை ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. இதைத் தொடர்ந்து வரும் மேத மாதம் 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து கோவையைச் சேர்ந்த பி.கே.கணேசன், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவானது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அபபோது நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட் தலையிடாது. வேண்டுமென்றால் மனுதாரர் கணேசன் இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் அணுகலாம் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.