சுப்பிரமணிய சுவாமிக்கு எதிரான தமிழக அரசின் 3 அவதூறு வழக்குகள்: விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த மூன்று கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி மீது தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதனை எதிர்த்து சுப்ரமணியசுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சுப்ரமணியசுவாமி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி, சுப்ரமணியசுவாமி இடைக்கால மனு தாக்கல் செய்தார். அவதூறு வழக்கு தொடர வழி வகை செய்யும் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டதோடு, அவதூறு வழக்கு தொடர வழி வகை செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரும் வழக்குடன், 3 வழக்குகளின் தீர்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்தது.