கட்சி சார்பற்று வேலை செய்யவே தமிழகம் வந்துள்ளேன்.. இது எனது மாநிலம்: சூரப்பா பேட்டி
நான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் வேலை செய்யவே இங்கு வந்துள்ளேன் என்றும் சூரப்பா தெரிவித்தார்.
சென்னை: நான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் வேலை செய்யவே இங்கு வந்துள்ளேன் என்றும் நான் இருக்கும் மாநிலம் எனது மாநிலம் என்றும் சர்ச்சைகளுக்கு இடையே நியமிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார்.
கன்னடரான சூரப்பாவை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காவிரி விவகாரம் நடைபெற்று வரும் நிலையில் கன்னடர் சூரப்பாவை துணைவேந்தராக நியமனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. எனினும் இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்று ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்தது.
மோடி வந்த நாளில்
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சூரப்பா கடந்த வியாழக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதாவது மோடி தமிழகம் வந்த நாளிலேயே இவரும் பதவியேற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் தனியார் தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.
திறமையை வெளிப்படுத்த
அப்போது அவர் கூறுகையில் எனது நியமனம் பெரும்பாலான கட்சிகளால் ஏற்கமுடியவில்லை என்ற விவகாரத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. நான் இங்கே வேலைபார்ப்பதற்காகவே வந்துள்ளேன். என்னுடைய திறமையை வெளிப்படுத்தவும் பல்கலைக்கழகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவுமே வந்துள்ளேன்.
எந்த கட்சியையும் சாராதவன்
எனவே வேறு எந்த விவகாரத்திலும் ஆர்வம் செலுத்த விரும்பவில்லை. ஏனெனில் இது என்னுடைய நாடு, நான் எங்கு வேலைப் பார்க்கிறேனோ அது என்னுடைய மாநிலம். நான் ஒரு உலக குடிமகன். நான் ஆர்எஸ்எஸ் , பாஜக உள்ளிட்ட எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல என ஏற்கெனவே கூறிவிட்டேன்.
நேர்மையாக இருப்பேன்
ஏற்கெனவே இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து நான் பேச விரும்பவில்லை. நான் எப்போதும் வெளிப்படையாக பேசுபவர், ஆனால் மற்றவர்கள் குறித்து பேசமாட்டேன். பல்கலைக்கழக விதிமுறைகளை பின்பற்றுவதில் அதிகபட்ச நேர்மையுடன் நடந்து கொள்வேன் என்றார் அவர். காவிரி போராட்டம் நடைபெறும் சமயத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கருத்து கூறமறுத்துவிட்டார்.