சென்னையில் சாரல் மழை ... என்ன ஒரு ஆச்சரியம்! - தமிழ்நாடு வெதர்மேன்
சென்னையில் சாரல் மழை பெய்வது ஆச்சரியமளிக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக சுட்ட அக்னியின் வேகத்தை தாங்க முடியாமல் வருணபகவான் சற்றே கருணை பொழிந்து வருகிறார். இந்த மழை ஆச்சரியமளிக்கிறது என்றும் எப்படி என்றே கணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக வெப்பத்தின் கொடூர தாக்குதலை அனுபவித்து வருகின்றனர். ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டுமே கோடை மழை பெய்கிறது. சென்னைவாசிகளுக்கு வர்தா புயலோடு மழையின் தூறலை கூட சரியாக உணரமுடியவில்லை.
சாரல் மழை
கடந்த இரு தினங்களாக 105 டிகிரிக்கும் மேலாகவே வெப்பம் பதிவாகி சுட்டெரித்த நிலையில் மின்வெட்டு வேறு புழுக்கத்தை அதிகரித்து விட்டது. அனலில் தவித்த மக்களுக்கு ஆறுதல் தறும் விதமாக இன்று சாரல்மழையுடன் சென்னையின் விடியல் தொடங்கியது.
தமிழ்நாடு வெதர்மேன்
திடீர் மழை குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இது நிச்சயமாக ஆச்சர்யத்தைத் தரும் மழை. கடலில் இருந்து பெறப்பட்ட மழை இது. சூப்பர் கம்ப்யூட்டர்கள்கூட சில நேரங்களில் இப்படியான ஆச்சர்யம் தரும் மழை வரவை கணிக்கத் தவறிவிடும்.
சூரியன் சுடும்
இருப்பினும், இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இந்த மழை நீடிக்க வாய்ப்பில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சூரியன் வழக்கம்போல் பளிச்சிடும். வெப்பம் அதிகரிக்கும். ஆனால், கடந்த இரண்டு நாட்களில் இருந்ததுபோல் இன்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புகள் குறைவே.
வெப்பம் அதிகரிக்கும்
அடுத்த இரண்டு நாட்கள் சென்னையில் வெப்பம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த ஆண்டின் அதிக வெப்பம் கொண்ட நாட்களாகக்கூட அமையலாம். தரைக்காற்று அதிகமாக இருக்கும் என்பதால் வெப்பம் அதிகரிக்கும். வெயில் வாட்டி எடுக்கும் என்பதால் பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வது நல்லது" என்றார்.