20 லட்சம் தருவதாக கூறி, ரூ. 3.5 லட்சம் மட்டுமே தந்தார்கள் .. மருத்துவமனை மீது வாடகைத்தாய் புகார்
சென்னை: வாக்குறுதி அளித்தபடி பணத்தைத் தரவில்லை என சென்னை கருத்தரிப்பு மருத்துவமனை ஒன்றின் மீது இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த வாடகைத்தாய் போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி, கணேஷபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா (24). இவரது கணவர் கூலித் தொழிலாளி. இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்தாண்டு ராமாபுரத்தில் உள்ள கருத்தரிப்பு மருத்துவமனை ஒன்றின் ஊழியர்கள் சிலர், கருமுட்டைகள் பெறுவது தொடர்பாக சத்யாவைத் தொடர்பு கொண்டனர். முதலில் கருமுட்டைகளைத் தானமாகக் கொடுத்தால் ரூ 50 ஆயிரம் தருவதாக சத்யாவிடம் அவர்கள் பேசியுள்ளனர். பின்னர், சத்யாவே வாடகைத் தாயாக இருந்து குழந்தைப் பெற்றுக் கொடுத்தால் ரூ. 10 லட்சம் தருவதாக ஆசைக் காட்டியுள்ளனர்.
இதற்கு சம்மதித்த சத்யாவும் செயற்கை முறையில் கருத்தரித்தார். சுமார் 6 மாத கால சிகிச்சைக்குப் பின்னர் இம்மாதம் 4ம் தேதி சத்யாவிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
சத்யாவிடமிருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட மருத்துவமனை ஊழியர்கள், அவருக்கு முன்னர் கூறியபடி ரூ. 10 லட்சம் கொடுக்காமல் வெறும் ரூ. 3 லட்சம் மட்டுமே கொடுத்தார்களாம். இந்த நிலையில் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சத்யா. அதில், ‘நான் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். ஒரு குழந்தைக்கு ரூ. 10 லட்சம் தருவதாக சொன்னார்கள். இரட்டைக் குழந்தை என்பதால் ரூ. 20 லட்சம் தர வேண்டும். ஆனால் வெறும் ரூ. 3.5 லட்சமே கொடுத்தார்கள். மீதிப் பணத்தை வசூலித்துத் தர வேண்டும் என்று போலீஸ் புகாரில் கூறியுள்ளார் சத்யா.