தூத்துக்குடி அரசு மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் ஆளில்லா விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அதன் குடியிருப்பு பகுதிகள் ஆளில்லா விமானம் மூலம் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் உடல்கள் நீதிபதிகள் முன்னிலையில் நேற்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மறுபரிசோதனை செய்யப்பட்ட 7 பேரில் எஞ்சியுள்ள 2 உடல்களை ஒப்படைக்க உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இன்று மாலைக்குள் அவர்களது உடல்களும் ஒப்படைக்கப்படும் என்றார்.
இதனிடையே உடலை வாங்க கூட்டமாக அனைவரும் திரண்டு வராமல் உறவினர்கள் மட்டுமே வந்து உடலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உறவினர்கள் அல்லாமல் வேறு யாரேனும் மருத்துவமனை வளாகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக யாரேனும் நிற்கிறார்களா? அல்லது உறவினர்கள் அல்லாதவர்கள் மருத்துவமனைக்குள் நுழைய உள்ளனரா என்பதை அறிய ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விமானங்களில் கேமிராக்களை பொருத்தி அதை வீடியோவாக எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.