காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்க - சுஷ்மாவை முற்றுகையிட்ட பெண்கள்
ஓகி புயலில் திசை மாறி சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜை காரைக்கால் பெண்கள் முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.
சென்னை: ஓகி புயலில் திசை மாறி எல்லை தாண்டிய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்கால் பெண்கள் சுஷ்மா சுவராஜை வலியுறுத்தியுள்ளனர்.
காரைக்கால் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர், பாஸ்போர்ட் சேவையில் உலகில் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது என்றார். 50 கி.மீ தொலைவில் உள்ள தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அனைவருக்கும் பாஸ்போர்ட் எளிதாக கிடைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறினார்.
விழாவில் பங்கேற்று பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சுஷ்மா சுவராஜை, புரட்சித்தலைவி என்று பாராட்டினார். நாடாளுமன்றத்தில் அவர் பேசியதைக் கேட்டு இந்தி கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
சுஷ்மா சுவராஜை அங்கிருந்து பெண்கள் சூழ்ந்து கொண்டனர். ஓகி புயலில் திசை மாறி சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விட்டனர். அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் சுஷ்மா சுவராஜிடம் வலியுறுத்தினர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.