கேரளாவில் கைதான மாவோயிஸ்ட் மகாலிங்கம்: சேலம், தர்மபுரியில் மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டை
சேலம்: ஜாமீனில் வெளிவந்து தலைமறை வான மாவோயிஸ்ட் மகாலிங்கம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார்.
திங்கட்கிழமையன்று காலை, ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பாஸ்கரன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை மகாலிங்கத்தை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மகாலிங்கம் அடைக்கப்பட்டார்.
சேலத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் க்யூ பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயுதப்பயிற்சி
தேனி மாவட்டம், வருசநாடு வனப்பகுதியில் பதுங்கியிருந்து ஆயுதப் பயிற்சி எடுத்த மாவோயிஸ்ட்களான மகாலிங்கம்,62. முருகானந்தம், மருது, லோகேஷ், பாலமுருகன் ஆகிய 5 பேரை, கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி தேனி கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மகாலிங்கம் தலைமறைவு
இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஜாமீன் பெற்று தலைமறைவானார். இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. மகாலிங்கத்தை தேடும் பணியில் கியூ பிரிவு போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
கேரளாவில் கைது
தலைமறைவான மகாலிங்கம் கேரள மாநிலம் திருச்சூர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக சென்னை கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் சென்னை கியூ பிரிவு போலீஸார் திருச்சூர் சென்று மகாலிங்கத்தை கைது செய்தனர்.
மகாலிங்கத்துக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றபோதிலும் தனது பேச்சாற்றலால் அனைவரையும் தனது செயல்பாடுகளுக்கு கட்டுப் படச் செய்தார்.
தமிழகத்தில் மாவோயிஸ்டுகள்
தமிழகத்தில் மீண்டும் மாவோயிஸ்டுகள் தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தமிழக கியூ பிரிவு உளவுத்துறை போலீசார் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக போலீசாருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினர்.
மாவோயிஸ்டுகள் முகாம்
அதில் தமிழகம் முழுவதும் 21 மாவோயிஸ்டுகள் முகாமிட்டு இளைஞர்களையும், இளம் பெண்களையும் தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருவதாகவும், அவர்களை கண்காணிக்கும்படி மாவோயிஸ்டுகளின் படத்துடன் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
கரூரில் கைது
இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷன் மீது கடந்த 2002ல் தாக்குதல் நடத்திய வழக்கில் தொடர்புடைய இரு பெண் மாவோயிஸ்டுகள் சந்திரா, கலா ஆகியோர் கரூரில் கைது செய்யப்பட்டனர்.
தேடுதல் வேட்டை
பெண் மாவோயிஸ்டுகளிடம் நடத்திய விசாரணையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 19 பேர் தங்கள் அமைப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களை கூண்டோடு கைது செய்யவும் க்யூ பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்களை, இரவு, பகலாக பல்வேறு இடங்களிலும் தேடி வருகின்றனர்.
சேலத்தில் தேடுதல் வேட்டை
கரூரில் கைதான கலாவின் கணவர் மணிவாசகம்,53, சேலம் தீவட்டிப்பட்டியை சேர்ந்தவர். இவரையும், வீராணம் பள்ளிக்கூடதாதனூர் பழனிவேல்,36, அம்மாபேட்டை காலனி கார்த்தி,39 ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து க்யூ பிரிவு போலீசார் அங்கு விசாரண நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் பதுங்கல்?
தர்மபுரி மாவட்டத்தில் பெருங்காடு, ஒகேனக்கல், பூதிப்பட்டி ஆகிய பகுதிகளில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பதுங்கி உள்ளார்களா? என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் தீவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையிலும் யாரும் சிக்காததால் தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.