கமிஷனர் ஜார்ஜுக்கு வந்த பார்சலில் குண்டு இல்லை... 2015ம் வருட காலண்டரும், டைரியும்தான் சிக்கின!
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பெயரில் நேற்று வந்த ஒரு மர்ம பார்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் பாதுகாப்புடன் பிரித்துப் பார்த்தபோது அதில் காலண்டரும், டைரியும் இருந்தது கண்டு போலீஸார் நிம்மதியடைந்தனர்.
சென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணி அளவில் கூரியர் மூலம் ஒரு துணி பார்சல் வந்தது. போலீஸ் கமிஷனர் பெயரில் வந்த பார்சல் குறித்து போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து தனி இடத்திற்குக் கொண்டு போய் அந்தப் பார்சலை வைத்தனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டனர்.
மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பார்சலை சோதித்தபோது பீப் பீப் என்று சத்தம் வந்தது. இதனால் வெடிகுண்டு இருக்கலாம் என்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பார்சலை அனுப்பியது யார் என்று ஆராயப்பட்டது. அதில், நீலாங்கரையில் இருந்து சுகுமார் என்பவர் அந்த பார்சலை அனுப்பி இருந்தார். உடனடியாக நீலாங்கரை போலீசார் உஷார்படுத்தப்பட்டு, பார்சலை அனுப்பிய சுகுமாரை பிடித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தான் காலண்டரும், டைரியும் கமிஷனருக்கு அனுப்பியதாக கூறினார். இதையடுத்து மோப்பநாய் மூலம் பார்சலை சோதனையிட்டபோது அது குலைக்கவில்லை. குண்டு இருந்தால்தான் நாய் குரைக்குமாம். எனவே பார்சலை போலீஸார் தைரியமாக திறந்து பார்க்க முடிவு செய்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு பார்சலைக் கொண்டு சென்றனர். அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலைத் திறந்து பார்த்தனர். அப்போது அதில் டைரியும், காலண்டரும் மட்டுமே இருந்தது.
சொன்னபடி டைரியும், காலண்டரும் மட்டுமே இருந்ததால் பிடிக்கப்பட்ட சுகுமாரை போலீஸார் விடுவித்தனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அமைதி திரும்பியது.