நீரில் மூழ்கடிக்கப்பட்ட "உண்மைகள்"... காணாமல் போன "இதயம்"... மாணவிகள் மரணத்தில் தொடரும் மர்மம்!
சென்னை: விழுப்புரம் கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. உண்மையிலேயே அம்மாணவிகள் தற்கொலை தான் செய்து கொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து குழப்பம் தீரவில்லை.
கள்ளக்குறிச்சி அருகே உள்ளது எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி. கடந்த மாதம் இந்தக் கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள் சரண்யா, பிரியங்கா மற்றும் மோனிஷா, அருகில் இருந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
முதலில் மாணவிகளின் மரணம் தற்கொலை எனக் கருதப்பட்டது. மாணவிகளின் கடைசிக் கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல் போன உறுப்புகள்...
ஆனால், மாணவிகளின் உடல்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மாணவிகளின் உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது, மாணவிகளின் உடல்களில் இருந்து இருதயம், நுரையீரல், கர்ப்பப்பை, சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அனுமதியின்றி நீக்கப்பட்டதாக பெற்றோர்கள் அதிர்ச்சிகரமான புகாரை முன்வைத்தனர்.
தற்கொலையல்ல...
அதனைத் தொடர்ந்து மீண்டும் மாணவி மோனிஷாவின் உடலை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில், தண்ணீரில் மூழ்கி அம்மாணவி இறக்கவில்லை, அவரது உடலில் 50 சதவீதம் ரத்தக்கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வாயில் நுரை தள்ளவில்லை...
அதோடு, வாய், மூக்கைப் பொத்தியதாலேயே அவர் இறந்திருக்க வேண்டும் என்றும், தண்ணீரில் மூழ்கினால் வாயில் நுரைத் தள்ள வேண்டும். ஆனால், கிணற்றில் எடுக்கப்பட்ட மோனிஷாவின் வாயில் நுரைத் தள்ளியதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அம்பலமாகும் உண்மைகள்...
ஏற்கனவே, மாணவிகளின் மரணத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்தக் கல்லூரி குறித்த பல அதிர்ச்சிகரமான உண்மைகள் அம்பலமாகி வருகின்றன. இந்நிலையில், மாணவிகளின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகமும் பெற்றோர் மத்தியில் பயத்தை அதிகரித்துள்ளது.
தேடல்...
பிரேத பரிசோதனை தகவலின் படி, மாணவிகள் கொலை தான் செய்யப்பட்டார்கள் எனில், கொலையாளிகள் யார், அந்தக் கடைசிக் கடிதத்தை எழுதியது யார் என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு...
மேலும், பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் மாணவிகளின் உடலில் இருந்து முக்கிய உறுப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் என்ன? இந்த வழக்கில் இன்னும் இது போல் பல்வேறு கேள்விகள் பதில் இல்லாமல் தொங்கி நிற்கிறது. விசாரணையின் முடிவுகளே இதற்கு பதில்கள் தரும் என உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.