பாருங்கப்பா, தலைமறைவு எஸ்.வி.சேகர் அமைச்சருடன் செல்பியெல்லாம் எடுக்கிறார்..!
எஸ்.வி.சேகர் அமைச்சர் இல்ல விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தனியார் நிகழ்ச்சிகள் முதல் தமிழக அமைச்சரின் இல்ல நிகழ்ச்சி வரை பங்கேற்று வரும் எஸ்.வி.சேகர், எப்போதுதான் கைது செய்யப்படுவார் என கேள்வி தற்போது சத்தமாக ஒலிக்க தொடங்கிவிட்டது.
பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தமைக்காக அவரை கைது செய்ய போலீசார் தேடும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தேவையில்லாத கருத்துக்களை உளறிகொட்டிய எஸ்.வி.சேகரின் தலைமறைவு வாழ்வு தற்போது பொன்விழா கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், பல்வேறு மாவட்டங்களில் அவர் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர் 2 முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தும், அவை இரண்டுமே நிராகரிக்கப்பட்டு விட்டது. போதாக்குறைக்கு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் எஸ்.வி.சேகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதற்கு முத்தாய்ப்பாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, எஸ்.வி.சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தாகிவிட்டது என்று ஒரே போடாக போட்டார்.
அதனடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து இன்னும் அவரை தேடிக் கொண்டே இருக்கின்றனர். சென்னையில் போலீசாரின் உதவியுடன் எஸ்வி.சேகர் உலா வருகிறார் என்று செய்திகள் பரவின. அப்போதும் 2 தனிப்படைகள் அமைத்து தேடிவரும் போலீசார் கண்ணில் எஸ்.வி.சேகர் படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பிறந்தநாள் விழாவில் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டுள்ளார். அந்த வீடியோவில் எஸ்.வி.சேகர் பாஜக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோருடன் சிரித்து பேசியபடி உள்ளார். அவரை சந்தித்து பேசியது உண்மைதான் என்றும், அவரை கைது செய்வது என் வேலையல்ல, அது போலீசாரின் வேலை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மத்திய மந்திரியே பேட்டியில் சொல்லிகூட 2 தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசாருக்கு எஸ்.வி.சேகர் கண்ணில் படவேயில்லை.
எப்போதுதான் எஸ்.வி.சேகரை கைது செய்வீர்கள் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடமே பத்திரிகையாளர்கள் நேரிடையாக கேட்டு விட்டார்கள். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவர் சென்று விட்டார். இதுவும் சமூக வலைதளம், ஊடகங்களில் வெளியானது. அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், எப்போதுதான் எஸ்.வி.சேகரை கைது செய்வீர்கள் என்று பலமுறை எழுப்பப்பட்டது. அப்போதெல்லாம் அவர் சொன்ன பதில், "இந்த விஷயத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதுதான்.
இப்படி சொன்ன தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மகனின் திருமண நிச்சயதார்த்தில் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டுள்ளார். அதுவும் அமைச்சர் குடும்பத்தினருடன் செல்பி வேறு எடுத்துள்ளார். இந்த புகைப்படமும், நிகழ்ச்சியும் 2 தனிப்படைகள் அமைத்து தேடிவரும் போலீசார் கண்ணில் படவில்லை. வேறு என்னவெல்லாம் ஆதாரம் கிடைத்தால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவார் என்பதை காவல்துறைதான் விளக்க வேண்டும்.
ஆனால் எஸ்.வி.சேகர் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்வையும், பல்வேறு நிகழ்ச்சிகளில், பல்வேறு தலைவர்களுடன் அவர் போட்டோ எடுத்து கெத்தாக போட்டுக் கொண்டு எளக்காரமாக மக்களைப் பார்த்து சிரித்தபடி போஸ் கொடுப்பதையும், தமிழகம் கொதித்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கிறது. தங்கள் கண்டனங்களையும், எதிர்மறை கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டபடிதான் இருக்கிறார்கள்.
8 வழி சாலைக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பதற்காக நேற்று விடிந்தும் விடியாததுமாக ஓடிபோய் போலீசார் மன்சூரலிகானை கைது செய்துள்ளனர். ஆனால் படு தெனாவட்டாக போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார் எஸ்.வி.சேகர் என்று மக்கள் கொதிப்பில் உள்ளனர். சட்டம் சாமானியர்களுக்கு மட்டும்தானா? அதிகார மிக்கவர்கள் மீதெல்லாம் ஒருபோதும் பாயவே பாயாதா? என்றும் ஆதங்கத்தையும் அவர்கள் கொட்டி தீர்த்து வருகின்றனர். நாளை மறுநாள் எழும்பூர் வளாகத்தில் எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பார்ப்போம்.. எஸ்.வி.சேகர் வருவாரா? இல்லையா என்று.