எனக்கு அதற்கும் தொடர்பு இல்லை: எஸ்.வி.எஸ். கல்லூரி சுப்பிரமணியன் முன்ஜாமீன் கோரி மனு
சென்னை: எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி அறக்கட்டளை அறங்காவலர் சுப்பிரமணியன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கட்டண கொள்ளை நடக்கிறது என்றும், கல்லூரி நிர்வாகத்தின் கொடுமையை தாங்க முடியவில்லை என்றும் எழுதி வைத்துவிட்டு விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
3 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த போதிலும் அவர்களின் பின் மண்டையில் பலத்த காயம் இருந்தது. இந்நிலையில் மாணவிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வாசுகியின் கணவரும், கல்லூரி அறக்கட்டளை அறங்காவலருமான சுப்பிரமணியன் சிறுநீரக் கோளாறு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
சிறுநீரக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கல்லூரி கட்டண வசூலுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சிகிச்சை பெற்று வரும் எனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.