எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை வழக்கு: கைதான தாளாளர் வாசுகிக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரி தாளாளர் வாசுகி மற்றும் கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல், தங்களை கொடுமைப்படுத்தியதாகக் கூறி மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி, இவர்களது மகன் சுவாக்கர்வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ், சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கலாநிதி, சுவாக்கர்வர்மா, தாளாளர் வாசுகி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளியான கள்ளக்குறிச்சி மாடூரை சேர்ந்த வெங்கடேசன் (40) என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு எஸ்விஎஸ் கல்லூரி முதல்வர் கலாநிதி, விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கல்லூரி தாளாளர் வாசுகி, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு, மறு உத்தரவு வரும் வரை சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
முன்னதாக, வாசுகிக்கு ஜாமீன் வழங்க, உயிரிழந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோரின் பெற்றோர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்யாண சுந்தரம், வாசுகிக்கும், கலாநிதிக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.