கொலை என்று தெரிந்த பிறகும் எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளின் மரணம் குறித்து விசாரணை இல்லையே: சீமான்
சென்னை: எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளின் மரணம் கொலை என்று அக்கல்லூரியின் தாளாளர் வாசுகியே தெரிவித்த பிறகும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், விழுப்புரம் மாணவிகள் 3 பேரின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரியும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கல்வி
நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால் வகுப்பறையில் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் அளவிலா கல்வியின் தரம் உள்ளது? பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என எந்த கல்லூரிக்கு சென்றாலும் ரூ. 10 லட்சம் கொடு, ரூ.20 லட்சம் கொடு என்கிறார்கள். சரி படித்துவிட்டு அந்த பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம் என்று மக்களும் பணம் கொடுக்கிறார்கள்.
மாணவிகள்
எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகள் மர்மமான முறையில் இறந்திருப்பதற்கு கல்வி வணிகமயமாக்கப்பட்டது தான். மாணவிகளின் மரணம் கொலை என்று கல்லூரியின் தாளாளர் வாசுகியே தெரிவித்துள்ளார். அப்படி இருந்தும் அது பற்றி முறையான விசாரணை நடத்தப்படவில்லை. காவல் துறையில் இருந்த விஷ்ணு ப்ரியாவின் மரணம் குறித்தே முறையாக விசாரணை நடத்தப்படவில்லையே.
எஸ்.வி.எஸ். கல்லூரி
எஸ்.வி.எஸ். கல்லூரிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரியின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். எந்த தொடர்பும் இல்லாமலா அந்த கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்தவுத்தாள்களை இத்தனை ஆண்டுகளாக திருத்தினார்களாம்? எஸ்.வி.எஸ். கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும். அந்த கல்லூரி மாணவ, மாணவியர் தொடர்ந்து கல்வி கற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ரோஹித்
பாரத தாய் தனது மகனை இழந்துவிட்டதாக ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா மரணம் பற்றி பிரதமர் மோடி ஐயா தெரிவித்துள்ளார். இதை ரோஹித் இறந்த அன்றே தெரிவித்திருக்கலாமே. யாகூப் மேமனின் விடுதலைக்காக போராடிய ரோஹித்தை தற்கொலை செய்ய தூண்டியுள்ளனர். மனதிற்கு சரியென்று பட்டதை தெரிவிக்கும் உரிமை கூட இல்லை என்றால் ஜனநாயகம் எங்கு உள்ளது?
தற்கொலை
சமூகத்திற்காக போராடிய அறிவான பிள்ளையான ரோஹித் தற்கொலை செய்துள்ளார் என்றால் அவருக்கு எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும்? அவரது தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்கொலை குறித்து நீதி விசாரணையும் நடத்தப்படவில்லை.