ஜூன் வரை எஸ்.வி.எஸ். கல்லூரியில் அனைத்து வசதியும் இருந்துச்சாம்: சொல்கிறது எம்.ஜி.ஆர். யுனிவர்சிட்டி
சென்னை: கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் அனைத்து வசதிகளும் இருந்ததாக கூறுகிறது எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்.
அடிப்படை வசதிகள் இல்லாத விழுப்புரம் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரிக்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் எப்படி அங்கீகாரம் அளித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர். பி. ஆறுமுகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,
2015ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட சோதனையில் எஸ்.வி.எஸ். சிதத் மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்பு, கல்வி உபகரணங்கள், ஆவணங்கள், புத்தகங்கள், உபகரணங்கள் வாங்கியதற்கான ஆதாரங்கள் கூட சரியாக இருந்தன.
ஒவ்வொரு 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து கல்லூரிகளிலும் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சோதனை நடத்தும். மாணவிகளிடம் இருந்து புகார்கள் வந்து குவிந்ததால் திடீர் என்று சென்று அந்த கல்லூரியில் சோதனை நடத்தவிருந்தோம். நவம்பர் 30ம் தேதி சோதனை செய்யலாம் என்றிருக்கையில் வெள்ளம் ஏற்பட்டதால் டிசம்பர் 30ம் தேதிக்கு அந்த சோதனை ஒத்தி வைக்கப்பட்டது.
கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மாணவிகளும், பெற்றோரும் புகார் தெரிவித்தனர். ஆனால் அதற்கான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லை. கடந்த மூன்று மாதங்களில் தான் அந்த கல்லூரி மீது புகார்கள் குவிந்தன. கல்லூரி நிர்வாகம் தங்களை கொடுமைப்படுத்தியதாக கூறும் மாணவிகள் அதை நிரூபித்தால் நன்றாக இருக்கும்.
அந்த கல்லூரி மாணவிகள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்படுவார்கள். கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்வதா அல்லது தவறை திருத்திக் கொள்ள கால அவகாசம் அளிப்பதா என்று முடிவு செய்வோம். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இந்த விவகாரம் குறித்து அரசுடன் கலந்து பேசி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
டிசம்பர் மாதம் நடத்திய சோதனையில் தான் மாநில அரசு அறிவித்துள்ளபடி அந்த கல்லூரியில் வசதிகள் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் கல்லூரியில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விழுப்புரம் தாசில்தார் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.