மாணவிகள் பிரியங்கா, சரண்யா உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. மோனிஷா உடலை பெற தந்தை மறுப்பு
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி அருகே கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோரின் உடல்கள் ஆட்சியர் உத்தரவுப்படி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சரண்யா, பிரியங்கா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மோனிஷாவின் உடலை பெற்றுக்கொள்ள அவரது தந்தை மறுத்து விட்டதால் மோனிஷாவின் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி எஸ் இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் சென்னை எர்ணாவூரை சேர்ந்த மோனிஷா, காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்த சரண்யா, திருவாரூரை சேர்ந்த பிரியங்கா ஆகியோரின் உடல்கள் கல்லூரியின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
கிணற்றின் அருகே மாணவிகள் எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், செலுத்திய கட்டணத்துக்கு ரசீது தரவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டு இருந்தது. இந்த காரணங்களால்தான் தாங்கள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்ததாகவும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்துகொண்ட 3 மாணவிகளின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவிகளின் சடலங்கள் பிரேதப் பரிசோதனை நடத்தக்கொண்டு வரப்பட்டபோது, ‘இது தற்கொலையல்ல; திட்டமிட்ட கொலை' என்று கூறி அவரது பெற்றோர் பிரேதப் பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தனர். மேலும், அவர்கள் சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதன் பிறகு, விழுப்புரம் ஆட்சியர் லட்சுமி, டிஐஜி அனிஷா உசேன், எஸ்பி நரேந்திர நாயர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சரண்யா, பிரியங்கா ஆகிய 2 மாணவிகளின் பெற்றோர் மட்டும் ஒப்புதல் அளித்தனர். எனவே, ஞாயிறன்று இரவோடு இரவாக 2 மாணவிகளின் உடல்களும் பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், மோனிஷாவின் பெற்றோர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் மோனிஷாவின் உடல் அழுகும் நிலையில் உள்ளதால் அவரது உடலை உடனே பிரேத பரிசோதனை செய்யுமாறு அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு கலெக்டர் லட்சுமி நேற்று உத்தரவிட்டார். அதன்பேரில் திங்கட்கிழமையன்று காலையில் அரசு மருத்துவமனை டாக்டர்கள், போலீசார் முன்னிலையில் வீடியோ பதிவுடன் மோனிஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இருப்பினும் மோனிஷாவின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுக்கவே அரசு மருத்துவமனையில் மோனிஷாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. இதனால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் மனு
இதற்டையே, மோனிஷாவின் தந்தை தமிழரசன், ‘சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தி வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். எனது மகளின் சாவிற்கு நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற, மோனிஷாவின் உடலை புதன்கிழமை வரை அரசு மருத்துவமனையிலேயே வைக்க வேண்டும் எனவும், நாளை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனு தொடர்பாக மீண்டும் விசாரிக்கும் என உத்தரவிட்டுள்ளது.