எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் நீரில் மூழ்கி இறக்கவில்லை.. சிபிசிஐடி.. அப்படியானால் கொலையா?
சென்னை: விழுப்புரம் எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கியதால் மரணமடையவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 3 பேரும் நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மூச்சை நிறுத்தியதால் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தாக்கல் செய்த பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் சித்த மருத்துவம், இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்ட படித்த மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கடந்த மாதம் 23ம் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கல்லூரி முதல்வர் கலாநிதி, தாளாளரின் மகன் சுவாகர் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீபதியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று முறையிட்டார்.
அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் காவல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே இவ்வழக்கு டிஜிபி அசோக்குமார் உத்தரவின்பேரில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையிலான குழுவினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதனிடையே மாணவிகள் உயிரிழப்பில் சந்தேகம் என உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மனு தாக்கல். இதனையடுத்து 3 பேர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், விழுப்புரம் தனியார் கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில், மாணவிகள் நீரில் மூழ்கி இறந்திருந்தால், அவர்களது நுரையீரல்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும். ஆனால், பிரேத பரிசோதனையில், அவ்வாறு இல்லை. எனவே, மாணவிகள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதை அடுத்து, மறுபிரேத பரிசோதனை அறிக்கை தேவையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாணவியின் பெற்றோர், இது குறித்து தங்களது மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனை பெற்ற பிறகே கூற முடியும் என்று பதில் அளித்ததை அடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை இவ்வாறு கூறுவதால் 3 மாணவிகளும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது. ஏற்கனவே இது திட்டமிட்ட படுகொலை என்று கல்லூரித் தாளாளர் வாசுகியும் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். பிரேதப் பரிசோதனை அறிக்கையால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.