எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மரணம்: கொலை வழக்காக மாற்றியது சிபிசிஐடி?
விழுப்புரம்: எஸ்.வி.எஸ் இயற்கை யோகா மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி போலீஸார் மாற்றியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத் துவக் கல்லூரியில் படித்த மாண விகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 பேரும் சில தினங்களுக்கு முன்பு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.
3 பேர் உயிரிழந்த வழக்கு முதலில் இபிகோ 306 பிரிவின் கீழ் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது மகன் ஸ்வாகத் வர்மா, முதல்வர் கலாநிதி மற்றும் அம்பேத்கர் புரட்சி கழக நிறுவனர் பெரு வெங்கடேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வாசுகியின் கணவர் சுப்பிரமணியன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை இன்னமும் கைது செய்யவில்லை.
கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட மூன்று மாணவிகளின் உடல்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவிகள் பிரியங்கா, சரண்யா ஆகியோரின் உடல்கள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மோனிஷாவின் உடலை வாங்க மறுத்து விட்டார் அவரது தந்தை தமிழரசன்.
தொடர்ந்து மோனிஷாவின் உடலை மீண்டும் மறுபரிசோதனை சென்னையில் நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தமிழரசன். இதற்கு நீதிமன்றமும் சம்மதித்து உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 28ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மோனிஷாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 சதவிகிதம் பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.
நீரில் மூழ்கி இறக்கவில்லை
சின்னசேலம் போலீஸாரால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் நீரில் மூழ்கி இறக்கவில்லை என்றும் மூச்சு அடைபட்டதால் இறப்பு நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உடல் உறுப்புகள் எங்கே?
விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியை அவரது பெற்றோரிடம் பெறவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார் மோனிஷாவின் வழக்கறிஞர் ரஜினிகாந்த்.
15 இடங்களில் காயம்
விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் 4 இடங்களில் ரத்தக்காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 15 இடங்களில் ரத்தக்காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக நீரில் மூழ்கி இறப்பவர்களின் வாயில் நுரை தள்ளும். ஆனால் கிணற்றிலிருந்து மோனிஷாவின் உடல் வெளியே எடுத்தவுடன் எடுத்த புகைப்படத்தில் அவரது வாயில் நுரையில்லை. எனவே அவர் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பே அவர் மரணம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது.
மரணத்தில் மர்மம்
இந்த மரணத்துக்கு முன்பு மோனிஷா தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடி இருக்கிறார். அவரது மூக்கு மற்றும் வாயை பொத்தியதற்கான அறிகுறிகள் முகத்தில் காணப்படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது எதற்காக போராடினார் என்பது தெரியவில்லை. இன்னும் வரவுள்ள முடிவில் அதற்கான விடை தெரிந்து விடும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்காக மாற்றம்
இதனிடையே மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக பதிவான வழக்கை இபிகோ 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக சிபிசிஐடி போலீஸார் மாற்றம் செய்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜி. ராமகிருஷ்ணன் கைது
இதனிடையே மாணவிகள் 3 பேர் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஜி. ராமகிருஷ்ணன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.