எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணம்: ஹைகோர்ட்டில் சிபிசிஐடி அறிக்கை
சென்னை: கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரியின் 3 மாணவிகள் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் இடைக்கால அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் வியாழக்கிழமை தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகியோர் கல்லூரிக்கு அருகே உள்ள கிணற்றிலிருந்து ஜனவரி 23ம் தேதி சடலமாக மீட்கப்பட்டனர். மோனிஷாவின் தந்தை எம்.கே.தமிழரசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மோனிஷாவின் உடல் மறு பரிசோதனை ஜனவரி 28ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணைக்கும் வழக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், சரண்யாவின் தந்தை ஏழுமலை தாக்கல் செய்த மனுவில், சரண்யாவின் உடலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மறு பரிசோதனை செய்யவும், ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், சரண்யாவின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்திதாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், சரண்யாவின் சடலத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் மறு பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதனையடுத்து கடந்த 13ம் தேதி சரண்யாவின் சடலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, தடயவியல் அறிவியல் துறை இயக்குநர் முருகேசன் தலைமையிலான 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பிரதே பரிசோதனை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சரண்யாவின் உடல் செய்யூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரதே பரிசோதனை அறிக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஏழுமலை, தமிழரசன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி ஆர்.மாலா முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவிகள் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். இதையடுத்து, அடுத்த விசாரணையை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.