சென்னை, கடலூரில் குவிந்துள்ள குப்பை மலை.. தூய்மை இந்தியா திட்டம் தூங்குகிறதா?
சென்னை: மத்திய அரசு கொண்டுவந்த ஸ்வச் பாரத் திட்டத்திற்கு உண்மையிலேயே இப்போதுதான் வேலை வந்துள்ளது. தமிழகத்தில் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றாமல் விட்டிருப்பதால், தூய்மை இந்தியா இப்போது அசுத்த இந்தியாவாக காட்சியளிக்கிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகமுக்கிய கனவு திட்டங்களில் ஒன்று, ஸ்வச் பாரத். தமிழில் தூய்மை இந்தியா.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டு காலம் ஆகியும், தூய்மை எனும் பழக்கம் இந்தியர்களிடையே இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு அந்த உணர்வை தட்டி எழுப்ப தூய்மை இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது.
துடைப்பம் போஸ்
தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்த, பிரதமர் மோடி முதல், அனைத்து அமைச்சரவை சகாக்களும் கையில் துடைப்பங்களோடு தெருக்களில் நின்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தனர்.
கமல் தூதுவர்
நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களை, இந்த திட்டத்திற்கான விளம்பர தூதர்களாக நியமித்தது அரசு. தமிழ்நாட்டில், நடிகர் கமல்ஹாசன் இதற்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
திட்டம் தொடருது
ஏற்கனவே தொழிலாளர்கள் கூட்டி சுத்தம் செய்த தெருக்களில் துடைப்பத்தை வைத்து போஸ் கொடுப்பதாக, அமைச்சர்கள் மீதும் விளம்பர தூதர்கள் மீதும் சில குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இருப்பினும், அந்த திட்டத்தை தொடருவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
குப்பை மலை
இத்தனை நாட்களாக போட்டோவுக்கு மட்டும் பயன்பட்ட, தூய்மை இந்தியா திட்டத்திற்கு உண்மையிலேயே இப்போதுதான் வேலை வந்துள்ளது. அதுவும் தமிழகத்தில். வெள்ள பாதிப்புக்கு உள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை போன்ற நகரங்களில் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன.
கோதாவில் குதிக்கவில்லை
வீட்டுக்குள் சேர்த்து வைத்திருந்த குப்பைகள், குப்பை கிடங்குகளில் சேமிக்கப்பட்ட குப்பைகள் என அனைத்துமே இப்போது தெருக்களில் குவிந்து, துர்நாற்றம் வீசிவருகிறது. சாதாரணமாக ஒரு சாக்லேட் கவரையே தெருவில் வீசக்கூடாது என்பதுதான் தூய்மை இந்தியாவின் அடிப்படை தத்துவம். ஆனால், இப்போது ஒரு கழிவு மலையே ஆக்கிரமித்துள்ளபோது தூய்மை இந்தியா குழுவினர் கோதாவில் குதித்திருக்க வேண்டாமா? ஆனால், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக கூட அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
100 தூதுவர்கள்
தூய்மை இந்தியாவின் தூதுவர்களாக சச்சின், ரெய்னா, தொழில் அதிபர் அனில் அம்பானி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சர் சசிதரூர், நடிகைகள் அமலா, தமன்னா என நாடு முழுவதிலும் 100 தூதுவர்கள் உள்ளனர். வழி மீது விழியை வைத்து தேடினாலும், ஒரு தூதுவர் கூட தமிழகத்தின் பக்கம் துடைப்பத்தோடு வரக்காணோம்.
பியூச புடுங்கிட்டாங்கய்யா
உள்ளூர் விளம்பர தூதர் கமலே வரவில்லையே என யாராவது கேட்கக்கூடும். பாவம், அவரை ஒன்றும் சொல்ல முடியாது. வீட்டுக்கு கரண்ட் கொண்டுவர, மின்வாரிய ஆபீசுக்கும் வீட்டுக்கும் அலைவதற்கே கமலுக்கு நேரம் போதவில்லையே. புடுங்கிய பியூஸ் 1 வாரம் கழித்துதானே திரும்ப கிடைத்துள்ளது.
வரிப்பணம் எங்கே
அனைத்து விதமான வரி விதிப்பு பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு இதுவரை 14 சதவீத சேவை வரி வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி திரட்டும் நோக்கில் கூடுதலாக 0.5 சதவீத செஸ் வரியுடன் சேர்த்து 14.5 சதவீத வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த அரை சதவீத வரி உயர்வை தமிழக மக்களும்தானே தங்கள் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தனர்.. இதனால் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு முதலில் தனி நிதியை ஒதுக்கியிருக்க வேண்டும். ஒதுக்கியிருந்தால் அது எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
போஸ் பாரத்
உண்மையிலேயே இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கம், ஸ்வச் பாரத் திட்டத்திற்கு இருக்குமானால், உடனடியாக தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இந்த நிதி மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்திருக்க வேண்டும். வந்திருக்காவிட்டால் இது ஸ்வச் பாரத் இல்லை, வெறும் போஸ் கொடுக்கும் பாரத் திட்டமாகே கருதப்படும்.