ரூ.300 கோடி சிலைகளை மீட்ட பொன்.மாணிக்கவேல் போன்ற அதிகாரியை பார்த்தது உண்டா? மாஜி அமைச்சர் கேள்வி
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசு செயல்பாடு சரியில்லை என்று முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதன் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது தமிழக அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது என்றுதான் கூற வேண்டியுள்ளது. ஏனெனில், ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையை ஹைகோர்ட் மேற்பார்வையிட்டு வந்தது.
இதுவரை பொன்.மாணிக்கவேல் போல எந்த போலீஸ் அதிகாரியாவது செயல்பட்டுள்ளார்களா? 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை பொன்.மாணிக்கவேல் மீட்டுள்ளார். இதுவரை எந்த போலீஸ் அதிகாரியாவது இந்த சாதனையை செய்துள்ளாரா? 30 வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ராஜராஜசோழன் சிலையை குஜராத்தில் இருந்து மீட்டு வந்தவர் பொன்.மாணிக்கவேல்.
தமிழக அரசின் நடவடிக்கை என்பது குற்றவாளிகளையும், சமூக அந்தஸ்திலுள்ளவர்களையும் காப்பாற்றும் செயல் போல தெரிகிறது. இவ்வாறு சுவாமிநாதன் தெரிவித்தார்.