தயாநிதி புகாரில் அர்த்தமே இல்லை.. சாமி; முடிஞ்சா கேஸ் போடுங்க.. குருமூர்த்தி சவால்!
சென்னை: தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக கொடுத்த வழக்கில் மூன்று பேர் கைதானது தொடர்பாக தயாநிதி அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த கவுதமன் உள்பட 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர்.
சன்டிவியில் முறைகேடாக தொலைபேசி இணைப்பு பயன்படுத்தியதாக ஒப்புக்கொள்ளக் கூறி கைது செய்யப்பட்ட மூவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் அடித்து துன்புறுத்துவதாகவும், தயாநிதிமாறன் குற்றம் சாட்டினார்.
யாரையோ திருப்திப்படுத்த சி.பி.ஐ. இப்படி நடந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவியை திருப்திபடுத்தும் நோக்கில் சி.பி.ஐ. நடந்திருக்கிறது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் தயாநிதிமாறன்.
தயாந்திமாறன் விளக்கம் குறித்து சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர், சிபிஐ வழக்கு பதிந்து கைது செய்யும்போது சம்பந்தப்பட்டோர் விளக்கம் தருவது இயல்பே. வழக்கில் இருந்து தீர்வு பெற நீதிமன்றத்தையே நாடவேண்டும். அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது நியாயமற்றது. மூவரும் துன்புறுத்தப்பட்டிருந்தால் மான நஷ்ட வழக்கு தொடரலாம்''என்று தெரிவித்துள்ளார்.
குருமூர்த்தி சவால்
இதனிடையே தயாநிதி கூறிய குற்றச்சாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி பதிலடி தரும் வகையில் கருத்து கூறியுள்ளார். இந்த வழக்கு தொடரப்பட்டது முன்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில்தான். இதில் எங்களை எப்படி அவர் குற்றம்சாட்ட முடியும். முடிந்தால் என்மீது வழக்கு தொடரட்டும் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார்.