என் விடுதலைக்காக பேசியதற்கு நன்றி.. கமலை நேரில் சந்தித்த யோகேந்திர யாதவ்!
8 வழி சாலைக்காக மக்களிடம் கருத்து கேட்டதற்காக கைது செய்யப்பட்ட யோகேந்திர யாதவ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: 8 வழி சாலைக்காக மக்களிடம் கருத்து கேட்டதற்காக கைது செய்யப்பட்ட யோகேந்திர யாதவ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மரியாதை நிமித்தமாக மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை சென்று சந்தித்தார்.
சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழிச்சாலை இந்தியா முழுக்க வைரலாகி உள்ளது. இந்த சாலைக்கு எதிராக களமிறங்கிய யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்ட பின் இந்த பிரச்சனை இந்தியா முழுக்க வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சாலை குறித்து கருத்து கேட்க வந்த ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து சில விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டார்
ஒருநாள் முழுக்க திருமணம் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த யோகேந்திர யாதவ் பின் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதன்பின் மீண்டும் விவசாயிகளை சந்திக்க அவர் முயன்றதாக கைது செய்யப்பட்டார். இதற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
கமல் கண்டனம்
கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து இருந்தார். வெளிமாநிலத்தில் இருந்து நமது விவசாயிகளிடம் கருத்து கேட்க வந்த சமூக செயற்பாட்டாளரை கைது செய்தது தவறு என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.
விடுதலை செய்யப்பட்டார்
இந்த நிலையில் 8 வழி சாலைக்காக மக்களிடம் கருத்து கேட்டதற்காக கைது செய்யப்பட்ட யோகேந்திர யாதவ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் கடந்த பிப்ரவரி 25ம் தேதிதான் 8 வழி சாலை குறித்து அறிக்கை வந்தது. ஆனால் மக்களிடம் இதை பற்றிய முழுமையான விவரம் தெரிவிக்கப்படவில்லை. 2015லேயே இந்த சாலைக்கு திட்டமிடப்பட்டுவிட்டது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சந்தித்தார்
அதற்கு முன்னதாக மரியாதை நிமித்தமாக கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார் யோகேந்திர யாதவ். தன்னுடைய விடுதலைக்காக குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார். மேலும் சேலம் சாலை குறித்தும் இவர்கள் உரையாடியதாக தெரிய வருகிறது.